செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு அப்பாவுடன் வந்த ஐஸ்வர்யா ரஜினி..ரொம்ப நாளுக்கு பிறகு மகளுடன் ரஜினி!
சென்னை, மாமல்லபுரத்தில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.
இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகளை வரவேற்க தமிழக அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு வீரர்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 2 ஆயிரம் அறைகள் மற்றும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2000 விளையாட்டு வீரர்கள்
இதற்கிடையே செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். இதில் கலந்துகொள்ள 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் இருந்து 87 பேருந்துகளில் நேரு விளையாட்டு அரங்கம் அழைத்து வரப்பட்டனர்.

சிறப்பான வரவேற்பு
மத்திய அமைச்சர்கள், சர்வதேச செஸ் கூட்டமைப்பு, அகில இந்திய செஸ் கூட்டமைப்பைச் சேர்ந்த பலர் கலந்துகொள்கிறார்கள். மேலும் இந்த விழாவில் பங்கேற்க முக்கியத் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்களுக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மகளுடன் ரஜினி
இந்நிலையில்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு தனது மகள் ஐஸ்வர்யாவுடன் வந்திருந்தார். தனது அப்பாவுடன் எடுத்த செல்ஃபியை தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா பகிர்ந்து இருந்தார். ஐஸ்வர்யா தனுஷ் பிரிவு அறிவிப்புக்கு பிறகு இருவரும் ஒன்றாக இந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டுள்ளனர்.இந்த புகைப்படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











