தனுஷ் மட்டும் தான் பாலிவுட் போவாரா? நாங்களும் போவோம்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வைத்த செக்மேட்!
சென்னை: பாலிவுட்டிலேயே செட்டில் ஆகப் போகிறேன் என சொல்ல ஆரம்பித்தது தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையே பிரிவு வரக் காரணம் என யூகங்கள் கிளம்பின.
நடிகர் தனுஷ் இதுவரை 3 பாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில், மேலும், பல படங்களிலும் நடிக்க கதை கேட்டு வருகிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாலிவுட்டில் புதிய காதல் படத்தை இயக்க ஆயத்தமாகி விட்டார். அது தொடர்பான அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

விவாகரத்துக்கு இதுவும் காரணமா
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 18 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், திடீரென விவாகரத்து அறிவிப்பை அவர்கள் இருவரும் அறிவிக்க காரணமே நடிகர் தனுஷ் பாலிவுட் படங்கள் பக்கம் கவனம் திருப்பியதும், அங்கேயே செட்டில் ஆகப் போகிறேன் என சொன்னதும் தான் காரணம் என்றும் சில யூகங்கள் கிளம்பின.

பாலிவுட் ஆர்வம்
அட்ரங்கி ரே படத்தின் ரிலீஸ் சமயத்தில் நடிகர்களை தென்னிந்திய நடிகர்கள், வட இந்திய நடிகர்கள் என்று பிரிப்பதையே தான் ஏற்கவில்லை எனக் கூறியிருந்த நடிகர் தனுஷ், நடிகர்கள் என்றாலே நடிகர்கள் மட்டும் தான் என்றும் அவர்களை ஒரு சிறிய எல்லைக்குள் அடைத்து விடக் கூடாது என்றார்.

3 படங்கள்
பாலிவுட்டில் ராஞ்சனா (அம்பிகாபதி), ஷமிதாப், அட்ரங்கி ரே (கலாட்டா கல்யாணம்) என இதுவரை நடிகர் தனுஷ் 3 பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இந்தி ரசிகர்கள் மத்தியில் தனுசுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த அவர், ஆண்டுக்கு ஒரு இந்தி படத்தை இனிமேல் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்தார். தனுஷின் இந்த முடிவு தான் இருவருக்கும் இடையே பிரிவு வரக் காரணம் என்கின்றனர்.

டைரக்ஷன் பண்ணக் கூடாது
அதே சமயம், ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இயக்க விடாமல் தனுஷ் தடுத்து வந்தது தான் இவர்கள் பிரியக் காரணம் என்றும் கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆல்பம் பாடல் இயக்குவது படங்களை இயக்குவது என டைரக்ஷனில் பிசியாகி விட்டார்.

இந்தி படத்தை இயக்குகிறார்
பாலிவுட்டில் தனுஷ் தான் நடிப்பாரா? நானும் படத்தை இயக்குவேன் என்கிற முனைப்புடன் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் தனது பாலிவுட் அறிமுகப் படத்தை ஆரம்பிக்கப் போகிறேன் என்கிற அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். 'Oh Saathi Chal' எனும் உருக்கமான காதல் படத்தை இயக்கப் போகிறேன் என அறிவித்துள்ளார். மீனு அரோரா, கிளவுட் 9 பிக்சர்ஸ், நீரஜ் மைனி உள்ளிட்ட பலர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

மகன்களுடன்
நடிகர் தனுஷ் தனது இரு மகன்களுடன் இளையராஜா கச்சேரியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் டிரெண்டான நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து போட்டா போட்டி போட்டு வருகிறார். இந்தி படத்தை இயக்கி சாதித்து காட்டிவிட்டு ஒன்றாக இணைய முடிவெடுத்திருக்கிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்றும் ஐஸ்வர்யா தனுஷ் என இன்னமும் சமூக வலைதள பக்கங்களில் பெயரை மாற்றாமல் இருப்பதற்கும் அதுதான் காரணமா? என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











