ஐஸ்வர்யா வீட்டில் நகை திருடுபோன விவகாரம்.. வசமாக சிக்கிய பணிப்பெண்!
சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருடுபோன விவகாரத்தில், பணிப்பெண் வசமாக சிக்கி உள்ளார்.
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதில், விஷ்ணு விஷால்,விக்ராந்த் ஆகியோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நேற்று தனது வீட்டு லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் நகைகள் திருடுபோய் விட்டதாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், என் திருமணத்திற்காக வாங்கி 60 சவரன் நகையை வீட்டு லாக்கரில் வைத்திருந்தேன்.

தங்க,வைர நகைகள் மாயம்
அந்த லாக்கரில் ஆரம், நெக்லஸ், கம்மல், வளையல், நவரத்தினம், வைரம் ஆகிய நகைகளை கடந்த 18 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைத்திருந்தேன். அந்த நகைகளை கடைசியாக தனது தங்கை செளந்தர்யாவின் திருமணத்தின் போது பயன்படுத்திவிட்டு மீண்டும் லாக்கரில் வைத்துவிட்டேன் அதன்பின் அந்த லாக்கரை நான் திறந்து பார்க்கவில்லை.

லாக்கரில் நகை இல்லை
கடந்த பிப்ரவரி 10ந் தேதி லாக்கரை திறந்து பார்த்தபோது தான், அதில் நகை இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். லாக்கரில் நகைகள் இருப்பது குறித்து வீட்டில் பணிபுரியும் 3 பணியாளர்களுக்கு தெரியும், இதனால், அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.

பணியாளர் மீது சந்தேகம்
வீட்டு பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாக ஐஸ்வர்யா தெரிவித்ததை அடுத்து, பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி, அவர்களின் வங்கி கணக்கை ஆய்வு செய்தனர். இதில் பெண் பணியாளர் ஈஸ்வரியின் வங்கி கணக்கில் பல பரிவர்த்தனைகள் நடந்திருந்ததால், அவரையும் அவரது கணவரிடமும் விசாரித்தனர்.

வசமாக சிக்கிய பணிபெண்
விசாரணையில் 2019ஆம் ஆண்டு ஈஸ்வரி வங்கியில் கடன் வாங்கி சோலிங்கநல்லூரில் ரூ.95 லட்சத்திற்கு நிலம் வாங்கியிருப்பதும் வாங்கிய கடனை இரண்டே வருடங்களில் திருப்பி செலுத்தியிருப்பதும் போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, பெண் பணியாளர் ஈஸ்வரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











