அப்பா ரஜினியை டைரக்ட் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அது என் பாக்கியம்! - ஐஸ்வர்யா
சென்னை: அப்பா ரஜினிகாந்தை டைரக்டு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் அது என் பாக்கியம் என்றார் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்.
கணவர் தனுஷை வைத்து 3 படத்தை இயக்கிய ஐஸ்வர்யா, அடுத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்குகிறார். இதில் கவுதம் கார்த்தி - ப்ரியா ஆனந்த் நடித்துள்ளனர்.
விரைவில வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை, தந்தை ரஜினிக்குப் போட்டுக் காட்டியுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

ரஜினி பாராட்டு
படத்தைப் பார்த்த ரஜினி, மகளின் இயக்கத் திறமை கண்டு வியந்து பாராட்டியுள்ளார்.
படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் கூறியதாக ஐஸ்வர்யா தனுஷ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ரஜினியை வைத்து புது படம்
இந்தப் படத்துக்குப் பிறகு ரஜினியை வைத்து ஐஸ்வர்யா படம் இயக்குவார் என்றும் செய்திகள் வந்தன. ஏற்கெனவே சவுந்தர்யா ரஜினி, அப்பாவை வைத்து கோச்சடையானை உருவாக்கினார். எனவே அடுத்த மூத்த மகளுக்கும் ஒரு வாய்ப்புத் தருவார் ரஜினி என்று பேச்சுகள் எழுந்துள்ளது.

தனுஷ் ஆசையும்..
மருமகன் தனுஷின் ஆசையும் அதுதானாம். தனது வுண்டர்பார் நிறுவனத்துக்கு மாமனார் ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆசையாம்.

அது என் பாக்கியம்
இதுகுறித்து ஐஸ்வர்யாவிடம் கேட்டபோது, "எனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தபோது, சூப்பர்ஸ்டாரை வைத்து இயக்கும் அளவுக்கு எனக்கு போதிய அனுபவம் இல்லை. எந்த இயக்குநராக இருந்தாலும், அப்பாவை வைத்து படம் இயக்குவதுதான் கனவாக இருக்கும். அந்த வகையில், எதிர்காலத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தால் அது எனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுவேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











