வாய்ப்பே இல்லை.. சென்னையில் கோப்ரா ஷூட்டிங்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜய் ஞானமுத்து!
சென்னை: கோப்ரா படத்தின் வெளிநாட்டு ஷூட்டிங்கை சென்னையிலேயே எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது என்ற வதந்தியை இயக்குநர் அஜய் ஞானமுத்து திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
Recommended Video
சியான் விக்ரம், ஸ்ரீனிதி ஷெட்டி, இர்ஃபான் கான், கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் கோப்ரா.
இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் படத்தயாரிப்பாளர் லலீத் குமார் தயாரித்து வருகிறார்.

விக்ரமும் ரஹ்மானும்
1993ம் ஆண்டு இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான புதிய மன்னர்கள் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதன் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ராவணன் படத்திற்கு இசையமைத்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன், மஹாவீர் கர்ணன் என விக்ரம் நடித்து வரும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான்.

ரஷ்யாவில் ஷூட்டிங்
கோப்ரா படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடைபெற்று வந்த போது, கொரோனா பரவல் காரணமாக ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, படக்குழு கடந்த மார்ச் மாதம் லாக்டவுனுக்கு முன்னதாக நாடு திரும்பியது. ரஷ்யாவில் பிரம்மாண்ட சண்டைக் காட்சியை படமாக்க திட்டமிட்டு இருந்த நிலையில், கொரோனாவால் திரும்பி வர நேர்ந்ததால் அஜய் ஞானமுத்து அப்செட்டாகி அப்போது டிவீட் ஒன்றையும் பதிவிட்டு இருந்தார்.

க்ரீன் மேட்டில்
இந்நிலையில், லாக்டவுன் முடிந்தவுடன் சென்னையிலேயே க்ரீன் மேட்டில், ரஷ்யாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை இயக்குநர் அஜய் ஞானமுத்து படமாக்கப் போகிறார் என்ற தகவல் வைரஸை போல வேகமாக பரவி வருகிறது. இதற்கு பிறகு ரஷ்யா சென்று படமாக்குவது சாத்தியமில்லை என்றும், ரஷ்யாவிலும் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

திட்டவட்டம்
இந்நிலையில், அந்த தகவல் முற்றிலும் வதந்தி என்றும், அப்படியெல்லாம் க்ரீன் மேட்டில் அந்தக் காட்சியை எடுக்க வாய்ப்பே இல்லை என்றும் ரசிகர் ஒருவர் போட்ட டிவீட்டுக்கு கீழே பதிலளித்துள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. லாக்டவுன் முடிந்த பிறகு ரஷ்யா அல்லது வெளிநாட்டில் நேரடியாக சென்று அந்த காட்சியை கோப்ரா படக்குழு குறைந்த ஆட்களுடன் சென்று படமாக்கும் என தெரிகிறது.

சம்மர் ரிலீஸ்
முன்னதாக விக்ரமின் கோப்ரா திரைப்படம் 2020ம் ஆண்டு சம்மரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் ஷூட்டிங்கே இன்னமும் முழுமை அடையாத நிலையில், கோப்ரா படத்தின் ரிலீஸ் 2021ம் ஆண்டுக்கு தள்ளிப் போகும் நிலை உருவாகி இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கால்ஷீட் பிரச்சனை
மேலும், சியான் விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன், மஹாவீர் கர்ணன் என மூன்று மெகா பட்ஜெட் படங்களில் பிசியாக இருப்பதால், நிச்சயம் கால்ஷீட் பிரச்சனைகளும், இந்த லாக்டவுனுக்கு பிறகு விஸ்வரூபம் எடுக்கும் என்றும், இதையெல்லாம் முடித்த பிறகு தான் கெளதம் மேனனின் பெண்டிங்கில் இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ஷூட்டிங்கிற்கு விக்ரம் செல்ல முடியும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











