Ajith: சீரியல் நடிகரால் அடித்த ஜாக்பாட்... அஜித் கேரியரை தூக்கி நிறுத்திய பிரபல நடிகை!
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகரான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார்.
எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் திரையுலகில் அறிமுகமான அஜித், இன்று டாப் ஹீரோக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் கேரியரில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது ஒரு சீரியல் நடிகர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுகுறித்த சுவாரஸ்யமான சில தகவல்கள் தற்போது தெரிய வந்துள்ளன.

அஜித் கேரியரை தூக்கி நிறுத்திய நடிகை:அமராவதி திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அஜித். பைக் ரேஸர், விளம்பர மாடல் என ஜாலியாக வலம் வந்துகொண்டிருந்த அஜித், எதிர்பாராதவிதமாக சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் பல சோதனைகளை கடந்த அஜித், இன்று கோலிவுட்டின் டாப் மோஸ்ட் ஹீரோக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இது அவரது 62வது படமாக உருவாகவுள்ளது. முன்னதாக அஜித்தின் கேரியரை உச்சம் கொண்டு சென்ற முதல் இரண்டு படங்கள் ஆசை, காதல் கோட்டை என்பது அனைவரும் அறிந்ததே. வசந்த் இயக்கிய ஆசை, அஜித் நடிப்பில் முதன்முறை 100 நாட்களை கடந்து ஓடியது.
அதனைத் தொடர்ந்து வெளியான காதல் கோட்டை சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. அகத்தியன் இயக்கத்தில் அஜித், தேவயானி, ஹீரா, தலைவாசல் விஜய், கரண் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். தேவாவின் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. ஆனால் இப்படத்தில் முதலில் நடித்தது சீரியல் நடிகர் அபிஷேக் தானாம். காதல் கோட்டை ஷூட்டிங் பாதி முடிந்த நிலையில், திடீரென அவர் இந்தப் படத்தில் இருந்து விலகியுள்ளார்.
பின்னர் அவருக்குப் பதிலாக தான் அஜித்தை தேர்வு செய்துள்ளார் இயக்குநர் அகத்தியன். அப்போது தேவயானியும் இப்படத்தில் இருந்து விலகுவதாக இருந்ததாம். ஆனால், தமிழில் அவரது முதல் படமான தொட்டாசிணுங்கியில் அஜித் தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேவயானி இரண்டாவதாக நடித்த கல்லூரி வாசல் படத்திலும் அஜித் நடித்திருந்தார்.

இதனால் தான் காதல் கோட்டை படத்தில் அஜித் கமிட்டானதும், அவருக்காகவே நடித்துக் கொடுத்துள்ளார் தேவயானி. சூர்யா - கமலி இருவரும் பார்க்காமல் கடிதங்களில் காதலித்துக்கொள்ள, ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடித் தீர்த்தனர். அதேபோல், முதலில் இப்படத்தின் க்ளைமேக்ஸில் அஜித்தும் தேவயானியும் பார்க்காமலேயே பிரிந்துவிடுவதாக இருந்ததாம். ஆனால், கடைசி நேரத்தில் தான் க்ளைமேக்ஸ் மாற்றப்பட்டுள்ளது.
காதல் கோட்டை படத்தின் வெற்றிதான், அஜித்தின் கேரியரை உச்சம் கொண்டு சென்றது. அதன்பின்னர் அவர் நடித்த படங்கள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற, கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரானார் அஜித். அதேநேரம் காதல் கோட்டை படத்தில் இருந்து பாதியிலேயே விலகிய சீரியல் நடிகர் அபிஷேக், இப்போதும் அவரது தவறை நினைத்து வருந்துகிறாராம். ஆனால், காதல் கோட்டை படத்தில் தேவயானியுடன் ஜோடியாக நடிக்க முடியாமல் போன அபிஷேக், கோலங்கள் நாடகத்தில் அபி என்ற கேரக்டரில் நடித்த தேவயானியின் கணவராக நடித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











