Ajith: "வழக்கம்போல அஜித் பலருக்கு உதவினார்.. அவர்களும் ஊருக்கே சொல்லி விட்டார்கள்” ப்ளூ சட்டை பளார்
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வெள்ளத்தில் சிக்கிய அமீர்கான், விஷ்ணு விஷால் இருவரையும் மீட்க அஜித் உதவி செய்திருந்தார். இது வைரலானது குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

அஜித்தை ட்ரோல் செய்த ப்ளூ சட்டை மாறன்
கோலிவுட் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பும் நாளை முதல் அஜர்பைஜான் நாட்டில் தொடரவுள்ளது. 70 நாட்கள் தொடர்ந்து நடக்கும் இந்தப் படப்பிடிப்பில் அஜித்தும் கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்நிலையில், சென்னை மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த அமீர்கான், விஷ்ணு விஷால் இருவரையும் மீட்க அஜித் உதவி செய்திருந்தார். இதனையடுத்து அமீர்கான், விஷ்ணு விஷால் இருவரும் அஜித்துடன் போட்டோ எடுத்திருந்தனர். மேலும், பொதுவான ஒரு நண்பர் மூலம் தெரிந்துகொண்டு தங்களுக்கு உதவிய அஜித்துக்கு நன்றி என விஷ்ணு விஷால் ட்வீட் செய்திருந்தார். இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.
இதேபோல் அஜித் பலருக்கும் உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆரம்பகாலம் முதல் சினிமாவில் தன்னுடன் பயணித்த பலருக்கும் அஜித் அதிகளவில் உதவி செய்துள்ளார். இதுகுறித்து அஜித்திடம் உதவி பெற்ற பலரும் சில பேட்டிகளில் மனம் திறந்துள்ளனர். அதேபோல் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் சிலருக்கு உதவியது பற்றியும் அவருடன் நடித்தவர்கள் ஷேர் செய்துள்ளனர்.
இந்நிலையில் அமீர்கானுக்கு அஜித் உதவியதை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். இதுபற்றி ட்வீட் செய்துள்ள அவர், "வழக்கம்போல அஜித் பலருக்கு உதவினார். வழக்கம்போல இதை வெளியே சொல்ல வேண்டாமென மீடியா & சோஷியல் மீடியாவினரை கேட்டுக்கொண்டார். வழக்கம்போல அவர்களும் ஊருக்கே சொல்லி விட்டார்கள். இந்த தொன்றுதொட்ட வழக்கம்... வழக்கம்போல் தொடரும்" என பதிவிட்டுள்ளார்.
அதாவது தான் செய்த உதவியை அஜித் வெளியே சொல்ல வேண்டாம் என சொன்னாலும், அது வெளியே வந்துவிடும். இது ஒருவிதமான பப்ளிசிட்டி என அஜித்தை மறைமுகமாக கலாய்த்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவுக்கு அஜித் ரசிகர்கள் தரமான பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











