அஜித்தின் 'காதல் கோட்டை'க்கு 24 வயது.. தமிழ் சினிமா ஆரவாரமாகக் கொண்டாடிய ஆச்சரிய கிளைமாக்ஸ்!
சென்னை: 'காதல் கோட்டை' படம் வெளியாகி 24 வருடம் ஆனதை ஒட்டி, அஜித் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.
விதவிதமான காதலை சொன்ன தமிழ் சினிமா, இனி என்ன புதுமையான காதலை அப்படி சொல்லிவிடும்? என்றுதான் நினைத்தார்கள்.
அவர்களின் நெற்றியின் பொட்டென்று தட்டிய படம், அகத்தியனின் காதல் கோட்டை!

தவிர்க்க முடியாத இடம்
பார்த்துப் பழகிய காதல் கதைகளுக்கு மத்தியில் பார்க்காமல் வளர்ந்த ஒரு காதலைச் சொன்ன, வாவ் படம். அஜித்தின் ஹிட் படங்கள் வரிசையில் இந்தப் படத்துக்கும் இருக்கிறது, தவிர்க்க முடியாத இடம். ஹீரோ அஜித், சூர்யாவாகவும் ஹீரோயின் தேவயானி கமலியாகவும் வாழ்ந்திருப்பார்கள், படத்தில். கரண், ஹீரா, மணிவண்ணன், பாண்டு, ராஜீவ், ராஜா, தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருந்த படத்துக்கு ஒளிப்பதிவு, தங்கர்பச்சான்.

நலம் நலமறிய ஆவல்
ஊட்டியின் குளிரையும் ஜெய்ப்பூரின் அழகையும் அப்படியே அள்ளி வந்திருப்பார், தன் கேமராவில். தேவாவின் இசையில், வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா, கவலைப்படாதே சகோதரா, நலம் நலமறிய ஆவல் உட்பட அனைத்து பாடல்களும் அசத்தல் ஹிட். அந்த காலகட்டத்தில் இந்தப் பாடல்களை முணு முணுக்காத வாய்களே இல்லை என்று சொல்லலாம்.

அகத்தியனின் இயக்கம்
ரசிகர்களை கடைசி வரைத் தவிக்க வைத்த பெருமை, அகத்தியனின் அசத்தலான இயக்கத்துக்கும் திரைக்கதைக்கும் உண்டு. சிவசக்தி பாண்டியன் தயாரித்திருந்த இந்தப் படம், சிறந்த இயக்கம், திரைக்கதை, சிறந்த தமிழ்ப் படம் ஆகிய மூன்று பிரிவுகளில் தேசிய விருதை வென்றது, அப்போது. சென்னையில் இருந்து ஊட்டி செல்லும் ரயிலில் தனது சர்டிபிகேட்டை தொலைக்கிறாள் ஹீரோயின்.

சேர்ந்தார்களா, இல்லையா?
சென்னையில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் ஹீரோவின் கையில் கிடைக்கிறது, அது. அதில் இருக்கும் ஊட்டி முகவரியை பார்த்து அனுப்பி வைக்கிறான், ஹீரோ. நன்றி தெரிவித்துக் கடிதம் அனுப்புகிறாள் நாயகி. தொடர்ந்து கடிதத்தின் மூலம் காதல் தொடர, அவர்கள் சேர்ந்தார்களா, இல்லையா என்பதுதான் கதை. கதையாகச் சொன்னால், இதில் என்ன இருக்கிறது என்றுதான் சொல்லத்தோன்றும்.

காதலின் வாசனை
ஆனால், அந்த அசத்தல் திரைக்கதை மொத்தமாகக் கட்டிப்போடும் சக்தி கொண்டது. கடந்த 1996 ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 12) வெளியான இந்தப் படத்துக்கு இன்று 24 வயது. ஆனாலும் இன்னும் இளமையாக வீசிக்கொண்டே இருக்கிறது, அந்தப் படம் காட்டிய காதலின் வாசனை. நேருக்கு நேர் சந்திக்காமல் காதல் வளர்க்கும் ஜோடியின் அந்த கிளைமாக்ஸ், தமிழ் சினிமா ஆரவாரமாகக் கொண்டாடிய காட்சி. இன்றுவரை இப்படியொரு காதலுக்கும் காதல் கதைக்கும் ஏங்கி கிடக்கிறார்கள் ரசிகர்கள்!


Click it and Unblock the Notifications











