திமுகவை ஆதரிக்கும் அஜீத் ரசிகர்கள்!

இந்த ஆண்டு தொடக்கத்தில் குடும்பத்தோடு போய் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசி பெற்றவர் அஜீத். அரசியலுக்கு வருவேன் என்று கடந்த சில மாதங்களாக கூறி வந்தார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தனது அரசியல் நிலைப்பாடு என்ன என்று கூறாமல் இருந்தார்.
ஆனால் அவரது ரசிகர்களில் ஒரு பகுதியினர் தங்களுக்கான அரசியல் பாதையைத் தேர்வு செய்து, அறிவித்துவிட்டனர்.
அஜீத் ரசிகர் மன்றத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ரெட் துரை, துணைச் செயலாளர் மதன்ஜி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான தாமோ அன்பரசனை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை திமுகவுக்கு தெரிவித்தனர். அவர்களுடன் மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அஜீத் ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். திமுக வெற்றிக்குப் பாடுபடுவதே தங்கள் முழு வேலை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரெட் துரை கூறுகையில், "இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று அஜீத் எங்களுக்குக் கூறவில்லை. எனவே எங்கள் மனசாட்சிப்படி, இந்த மாநிலத்துக்கு யார் வந்தால் நல்லதோ அவர்களுக்குப வாக்களிக்கிறோம். திமுக ஆட்சியில்தான் மாநிலம் நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. சலுகைக் கட்டணத்தில் கல்வி கிடைத்துள்ளது. எனவேதான் எங்கள் ஆதரவை திமுகவுக்கு தந்துள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications











