மங்காத்தா ரீ ரிலீஸ் அலப்பறைகள்.. த*கொலை படையாக மாறிய அஜித் ரசிகர்கள்.. தியேட்டர கொளுத்திருப்பாங்க போல
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா திரைப்படம் 15 வருடங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் (ஜனவரி 23) ரீ ரிலீஸானது. அஜித்தின் படங்கள் என்றாலே திருவிழா போல் கொண்டாடும் அவரது ரசிகர்கள் இந்த முறையும் அதையே பின்பற்றினார்கள். அதேசமயம் சில இடங்களில் அவரது ஆரவாரம் எல்லாம் ஓவர் டோஸாகி பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்தது. பலரிடம் அது கண்டனத்தையும் பெற்றிருக்கிறது.
அஜித்துக்கும் அவரது ரசிகர்களுக்கும் மங்காத்தா படம் மறக்கவே மறக்காது. தொடர் தோல்விகளில் துவண்டு கொண்டிருந்த அஜித்துக்கு பில்லா படம் கொஞ்சம் சுவாசம் கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு நடித்த ஏகன், அசல் ஆகிய இரண்டு படங்களும் மீண்டும் தோல்வியையே கொடுத்தன. இதனால் அஜித்தின் கரியர் அவ்வளவுதான் என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பின. அப்படிப்பட்ட சூழலில்தான் தனது 50ஆவது படமாக மங்காத்தா படத்தில் நடித்தார்.
படம் மெகா ப்ளாக் பஸ்டர்: வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்தப் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அட்டகாசமான இயக்கம், திரைக்கதையில் வைக்கப்பட்ட எதிர்பார்க்காத ட்விஸ்ட், அஜித்தின் வில்லத்தனமான நடிப்பு என அத்தனையும் கைகூடி வர படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. குறிப்பாக ஒரு ஸ்டார் ஹீரோ இந்த மாதிரியான நெகட்டிவ் ரோலில் நடித்ததை நினைத்து இன்னமும் ரசிகர்களும், திரைத்துறையினரும் ஆச்சரியப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட மங்காத்தா: இப்படி ஏகப்பட்ட சிறப்புகளை கொண்டிருக்கும் மங்காத்தா திரைப்படம் கடந்த 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த முறையும் ஏகே ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்தப் படத்தின் ரிலீஸாக புதிதாக ரிலீஸான திரௌபதி 2 படத்துக்கு கூட்டமே வரவில்லை என அதன் இயக்குநர் மோகன் ஜி புலம்பும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. ஸ்க்ரீனில் அஜித்தை பார்க்கும்போதெல்லாம் ஏகே ரசிகர்களின் குரல்கள் தியேட்டரையே அதிர வைக்கும்படி இருக்கின்றன.
ஓவர் அலப்பறை: ஆனால் ரசிகர்களில் சிலர் செய்யும் செயல்கள் முக சுளிப்பையும், பதைபதைப்பையும் உண்டு செய்திருக்கின்றன. அதாவது 20 வயதுக்குள் இருக்கும் அஜித் ரசிகர் ஒருவர் தனது இடுப்பில் சர வெடியை கட்டிக்கொண்டு தியேட்டர் ஊழியர்களுக்கு தெரியாமல் உள்ளே சென்று; மங்காத்தா படத்தில் ஏகே இன்ட்ரோ சீனின்போது அதை வெடித்த சம்பவம் பெரிய பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக காவல் துறையினருக்கு தியேட்டர் ஊழியர்கள் தகவல் கொடுக்க; அவர்கள் வந்து சம்பந்தப்பட்டவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்கள்.
வசூலில் கெத்து: இந்த சம்பவம் பெரிய கண்டனத்தை சம்பாதித்திருக்கிறது. விட்டால் அவர்கள் தற்கொலை படையாக மாறிவிடுவார்கள் போல என்று குரல்கள் கேட்கின்றன. இதற்கிடையே மங்காத்தா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட இரண்டு நாட்களில் மொத்தம் தமிழ்நாட்டில் 8 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











