அஜித்தின் தந்தை மறைவு.. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல்!
சென்னை : நடிகர் அஜித்குமாரின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 85.
அஜித்தின் தந்தை உயிரிழந்த செய்தி இணையத்தில் வெளியானதை அடுத்து, ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும்,திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அஜித் தந்தையின் உடல் ஈசிஆரில் வீட்டில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு பின் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. இதற்காக அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் இரங்கல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என மாண்புமிகு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேரில் இரங்கல்
அதே போல நடிகரும் , அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில், நடிகர் திரு.அஜீத்குமார் அவர்களின் அன்புத்தந்தையார் திரு.பி.எஸ்.மணி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். அஜீத் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவருடைய தந்தையாரின் திருவுடலுக்கு மரியாதை செலுத்தினோம்.. குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆழ்ந்த இரங்கல்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்,தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.

வேதனை அடைந்தேன்
அதே போல ஓ.பன்னீர் செல்வமும் தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.P.சுப்ரமணியம் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தமது தந்தையை இழந்து தவிக்கும் திரு.அஜித் குமார் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மிகவும் வருத்தமடைந்தேன்
காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில், அஜித்குமார் சார் தந்தையின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அஜித் சாரின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அஜித் சார் உலகத்திற்கே பெரிய ஹீரோ ஆனால் உங்கள் தந்தை உங்களுக்கு பெரிய ஹீரோ, தந்தையை இழப்பது கடினம், அவருடைய நினைவு நமக்கு பலம் தரும். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











