கடவுளே அஜித்தேன்னு கூப்பிடாதீங்கப்பா கஷ்டமா இருக்கு.. ரசிகர்களின் கோஷத்துக்கு தடை விதித்த அஜித்!
சென்னை: அல்டிமேட் ஸ்டார் என ஆரம்பத்தில் அஜித்தை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். தீனா படத்துக்குப் பிறகு தல அஜித் என கோஷம் விண்ணை முட்டியது. ஆனால், திடீரென அப்படியெல்லாம் தன்னை யாரும் அழைக்க வேண்டாம் என அஜித் அறிவுறுத்தினார். ஏகே அல்லது அஜித் குமார் என்று அழைத்தாலே போதும் என்றார்.
ஆனால், ரசிகர்கள் சும்மா இருப்பார்களா?.. அவர்களின் அன்பை வெளிக்காட்டும் விதமாக புதுசாக "கடவுளே அஜித்தே"ன்னு புதிய கோஷத்தை உருவாக்கி உலகளவில் டிரெண்ட் செய்து விட்டனர். இந்நிலையில், தற்போது அப்படியும் கோஷம் போட வேண்டாம் என அதிரடியாக அஜித் குமார் அன்புக்கட்டளை இட்டுள்ளார்.

அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா தற்போது அஜித்தின் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அஜித் ரசிகர்களை அமைதியாக்கிவிட்டார். விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அடுத்தடுத்து அஜித் படங்கள் வெளியாகவுள்ள நிலையில், மீண்டும் ரசிகர்களை வழிநடத்தும் முயற்சியாக அஜித் குமார் அறிவித்திருப்பதை பலரும் வரவேற்று வருகின்றனர்.
அஜித் குமார் அறிக்கை: "வணக்கம்! சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரிகமாக தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க... அஜித்தே' என்ற இந்த கோஷம் என்னை கவலை அடைய செய்திருக்கிறது. எனது பெயரை தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துணியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே பொது இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.
என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்! - அஜித்குமார்."

எல்லை மீறிய ரசிகர்கள்: தல என்றே அழைக்க வேண்டாம் என அஜித் குமார் எந்த காரணத்திற்கு சொன்னாரோ அதை எல்லாம் கொஞ்சம் கூட காதில் வாங்காமல் அவரை கடவுளே அஜித்தே என அழைத்து 'கடவுளே" என்கிற வார்த்தையையே அவர் குறிப்பிடாத அளவுக்கு ஒரு அறிக்கை வெளியிடும் அளவுக்கு ரசிகர்கள் வைத்துவிட்டார்களே என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அஜித் ரசிகர்கள் இதை நிறுத்திவிட்டு இன்னொரு புதிய ஸ்லோகத்தை சீக்கிரமே ஆரம்பித்து வைப்பார்கள் என்றும் அதற்கும் அஜித் ஒரு அறிக்கை வெளியிடுவார் என்றும் கூறுகின்றனர்.

அனிருத் பார்த்த வேலை: விடாமுயற்சி படத்தின் டீசரிலேயே "கடவுளே அஜித்தே" ட்யூன் வருவது போல விடாதே முயற்சி என அனிருத் ஏன் இசையமைத்திருந்தார் என்றும் அதை அஜித் குமார் அனுமதித்தது ஏன் என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

நல்ல விஷயம்: சினிமாவை பொழுதுபோக்குக்காக மட்டுமே ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்றும் குடும்பத்தை மட்டுமே முதலில் கவனிக்க வேண்டும் என அஜித் குமார் குறிப்பிட்டு இருப்பது பாராட்டுதலுக்குரியது என்றும் இளைஞர்கள் அதிகளவில் ஆன்லைனில் நடிகர்களின் புகழ் பாடுவதும் நடிகர்களுக்காக தங்கள் பெயரை எல்லாம் ட்ரோல் பண்ணுகிறேன், ஆபாசமாக திட்டுகிறேன் என கேஸ் வாங்கிக் கொண்டு திரிவதுமாக இருப்பதை நடிகர்கள் தடுக்க முயற்சிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications