அனைத்தையும் விட்டுவிட்டு வந்தார்.. அம்மாவை நினைத்து கலங்கும் அஜித் சகோதரர்.. கனக்க வெச்சுட்டாரு
சென்னை: அஜித்தின் தந்தையான சுப்ரமணியம் கடந்த 2023ஆம் ஆண்டு வயது முதிர்வு காரணமாகவும், பக்கவாட்டு காரணமாகவும் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது 85ஆவது வயதில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து இன்று அஜித்தின் அம்மா மோகினி மணியும் வயதோதிகம் காரணமாக காலமாகிவிட்டார். இந்நிலையில் அஜித்தின் சகோதரர் தனது தாய் குறித்து உருக்கமாக சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். அதை படித்து பலரும் கலங்கியிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித். அவரது தந்தை சுப்ரமணியம் கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதனையடுத்து தனது தாய் மோகினியை பக்குவமாக பார்த்துவந்தார் ஏகே. சூழல் இப்படி இருக்க இன்று மோகினியும் தனது 89ஆவது வயதில் மூச்சை நிறுத்திக்கொண்டார். இந்நிலையில் தனது தாய் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டிருக்கிறார் அஜித்தின் சகோதரர் அனில். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மோகினி மணி (1937-2026) எங்கள் தாயார் மோகினி மணி, கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை உறக்கத்திலேயே இயற்கை எய்தினார். அவருக்கு வயது 89.

மனதிலும் நிலைத்திருக்கும்: கடந்த சில ஆண்டுகளாக அவருக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் மருத்துவ உதவியும், ஆதரவும் வழங்கிய மருத்துவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த துயரமான நேரத்திலும், அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்ததையும், அன்புக்குரியவர்களின் அளவற்ற பாசத்தையும் அக்கறையையும் பெற்றதையும், அனைவரின் உண்மையான மரியாதையையும் பெற்றிருந்ததையும் நினைத்து நாங்கள் ஆறுதல் அடைகிறோம். அவரது கனிவான இயல்பு, தன்னலமற்ற மனம் மற்றும் அமைதியான கண்ணியம் அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கும்.
இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்: இந்தியா சுதந்திரம் பெற்றபோது நடைபெற்ற நாட்டுப் பிரிவினையின் காரணமாக, சிந்தி சமூகத்தைச் சேர்ந்த சிறுமியாக தனது குடும்பத்துடன் அனைத்தையும் பின்னால் விட்டுவிட்டு இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர் அவர். வாழ்க்கையை புதிதாக தொடங்கிய அவர், தனது பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேறியதையும் சாதித்ததையும் பார்த்து அளவற்ற மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தார். உண்மையில், எங்கள் வாழ்க்கையில் நாங்கள் அடைந்திருக்கும் ஒவ்வொரு சாதனைக்கும் முக்கிய காரணம் அவரது அரவணைப்பு, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் ஞானமிக்க ஆலோசனைகள்தான். எங்கள் இல்லத்தின் இதயமும் ஆன்மாவும் அவரே.
ஏற்க முடியவில்லை: எங்கள் மறைந்த தந்தையுடன் கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களாக இனிய தம்பதியாக வாழ்வை வாழ்ந்தவர் அவர். அவர்கள் பகிர்ந்து கொண்ட அன்பான நினைவுகள் எங்களுக்கு என்றும் ஆறுதலையும் வலிமையையும் அளிக்கும். அவரது மறைவையொட்டி எங்களுக்கு வந்துகொண்டிருக்கும் அன்பான இரங்கல் செய்திகள், அனுதாபங்கள் மற்றும் நினைவுகூரல்களால் நாங்கள் நெகிழ்ந்திருக்கிறோம். இந்த நேரத்தில் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவோ அல்லது செய்திகளுக்கு உடனடியாக பதிலளிக்கவோ இயலாத சூழல் இருப்பதால், அதை புரிந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அவரது இறுதிச்சடங்குகள் குடும்பத்தினருக்குள் தனிப்பட்ட முறையில் நடைபெறும். பெற்றோர் அல்லது குடும்ப மூத்தோரை இழந்த துயரத்தை அனுபவித்தவர்கள் எங்கள் இந்த விருப்பத்தை மதிப்பார்கள் என்று நம்புகிறோம். அவர் வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு கற்றுக்கொடுத்த அமைதி, கண்ணியம் மற்றும் மென்மையான மனவலிமையுடன் அவரது நினைவுகளை நாங்கள் போற்றுவோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்நாள் முதலமைச்சர் விஜய் ஆகியோரும் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
