தெலுங்கு தயாரிப்பாளரை தேடி ஓடிய அஜித் குமார்.. குட் பேட் அக்லி படத்தில் இத்தனை கோடி சம்பளமா?
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என்பது பெயரில் மட்டும் தான் இருக்கிறது. தங்களது படங்களை கூட தாங்கள் தயாரிப்பது கிடையாது. அதே போல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் படங்களை கொடுப்பது கிடையாது என்கிற குற்றச்சாட்டுகள் தற்போது அனைத்து முன்னணி ஹீரோக்கள் பக்கம் எழுந்து இருக்கிறது.
நடிகர் அஜித் குமாரும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதை 'குட் பேட் அக்லி' படம் ஆணித்தரமாக நிரூபித்து விட்டது என்கின்றனர். லைகா தயாரிப்பில் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் குமார் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கிறது.

அல்லு அர்ஜுனை வைத்து புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடிக்க காரணமே அதிக சம்பளம் தான் என்கின்றனர்.
தெலுங்கு தயாரிப்பாளரை நாடும் டாப் ஹீரோக்கள்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் குமார், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பலரும் தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்து வருவது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பவர்களுக்கு முன்னணி நடிகர்களின் படங்களை எடுக்கும் உரிமை திடீரென மறுக்கப்பட்டு வருவது ஏன் என்கிற கேள்வியை முன் வைத்து வருகின்றனர்.
புது ரூட்டில் அஜித்: பல ஆண்டுகளாக தமிழ் தலைப்பை தனது படங்களுக்கு வைத்து வந்த அஜித் குமார் மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் தெலுங்கு தயாரிப்பில் படம் பண்ணும் போது அந்த நிறுவனம் எப்படி தமிழ் தலைப்புக்கு தலையாட்டும் அதனால் தான் ஆங்கில டைட்டிலுக்கு அஜித் தாவி விட்டார் என்கின்றனர். விடாமுயற்சி படம் என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், விரைவில் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப் போவதாக கூறுகின்றனர்.
இத்தனை கோடி சம்பளமா?: நடிகர் விஜய் கோட் படத்திற்கே 200 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். தனது கடைசி படமான தளபதி 69 படத்துக்கு 225கோடி சம்பளமாக டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திடம் பேசிவிட்டார் எனக் கூறுகின்ரனர். இந்நிலையில், நடிகர் அஜித் குமாருக்கு 163 கோடி சம்பளம் கொடுக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் முன் வந்த நிலையில், விடாமுயற்சிக்கு 105 கோடி சம்பளம் பேசப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 50 கோடிக்கும் அதிகமாக அடுத்த படத்திற்கு சம்பளம் கொடுப்பதால் தான் தெலுங்கு தயாரிப்பாளர் படத்தில் நடிக்க அஜித் ஒப்புக் கொண்டார் என்றும் கூறுகின்றனர்.
புரமோஷன் புடிக்காது: நடிகர் அஜித்துக்கு புரமோஷன் புடிக்காது என்றும் தான் நடிக்கும் பட விழாக்களுக்கே அவர் வரமாட்டார் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், கடந்த சில நாட்களாக நடிகர் அஜித் குமார் பைக் ஓட்டுவது, பைக் ஓட்ட சொல்லித்தருவது, பிரியாணி சமைப்பது, ஸ்னூக்கர் ஆடுவது என ஏகப்பட்ட வீடியோக்களை தொடர்ந்து அஜித்தின் அனுமதியுடன் சுரேஷ் சந்திரா வெளியிட்டு வருகிறாரே இந்த புரமோஷன் எதற்கு என விஜய் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஒரு பக்கம் விஜய்யின் கேரள வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன. இன்னொரு பக்கம் அதற்கு போட்டியாக சூட்டிங்கே போகவில்லை என்றாலும் அஜித் பைக் டூர் செல்லும் வீடியோக்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை ஹேப்பி ஆக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications











