வலிமை ரிலீஸ்...கோவை திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு... பைக் ஆசாமிகளை தேடும் போலீஸ்
கோவை : அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் இன்று உலகளவில் 4000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Recommended Video
முதல் நாள் முதல் ஷோவை பார்க்க ரசிகர்கள் அனைத்து திரையரங்குகளிலும் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கோவையில் வலிமை ரிலீசான திரையரங்கில் மர்மநபர்களின் வெறிச்செயலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வலிமை படம்
நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் வலிமை படம் வெளியாகியுள்ளது. உலகளவில் 4000 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள முதல் பான் இந்தியா படமாக வலிமை உள்ளது. இதன்மூலம் அவருக்கு இந்திய அளவில் அதிகமான ரசிகர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
இன்றைய தினம் வலிமை படம் ரிலீசானதையொட்டி ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் முதல் நாள் முதல் ஷோ பார்க்க முண்டியடித்தனர். அதிகாலை 4 மணிக்கு முதல் ஷோ திரையிடப்பட்ட நிலையில், முன்னதாக டிக்கெட் புக்கிங்கில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

2 வருட காத்திருப்பு
இதுமட்டுமின்றி, போனி கபூர், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்களும் திரையரங்குகளில் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்தனர். ரசிகர்களின் 2 வருட காத்திருப்பிற்கு பதில் சொல்லும் வகையில் இந்தப் படம் மிகுந்த பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பைக் ஸ்டண்ட் காட்சிகள் மிரட்டலாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம்
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகளில் நள்ளிரவு முதலே ஆட்டம் பாட்டத்துடன் படத்தின் முதல் ஷோவிற்காக காத்திருந்தனர். இதனிடையே கோவை காந்திபுரம் நூறடி சாலையில் உள்ள கங்கா யமுனா காவேரி திரையரங்கில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் காலை 5 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு
முதல் ஷோவிற்கு ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்ற நிலையில், அடுத்த காட்சிக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் சேதமடைந்து ரசிகர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டது.

போலீசார் விசாரணை
இதையடுத்து அங்கு வந்த காட்டூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித்தின் வலிமை படத்தை ரசிகர்கள் கொண்டாடிவரும் சூழலில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் கொண்டாட்டத்தை குலைக்கும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











