அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், அந்த ஹீரோ வீட்டுக்கும் மிரட்டல் விடுத்தவராம்!
சென்னை: அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், அந்த ஹீரோ வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்துள்ளது.
Recommended Video
நடிகர் அஜித், வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது விரைவில் வெடிக்கும் என்றும் மர்ம நபர் ஒருவர், போலீசுக்கு நேற்று முன்தினம் தகவல் தெரிவித்தார்.
சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வெடிகுண்டு நிபுணர்கள்
தகவலை சொல்லிவிட்டு அந்த நபர் உடனடியாக போன் இணைப்பை துண்டித்து விட்டார். உடனடியாக நடிகர் அஜித் வீடு உள்ள திருவான்மியூர் மற்றும் நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் அஜித் வீட்டுக்கு நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாயுடன் விரைந்தனர்.

ஒரு மணிநேர சோதனை
அப்போது வீட்டில் நடிகர் அஜித், தனது குடும்பத்தினருடன் இருந்தார். வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை போலீசார் தெரிவித்ததும், நடிகர் அஜித் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். போலீசாரை, முகக் கவசத்துடன் ஒவ்வொரு அறையாக அழைத்துச்சென்று சோதனை செய்ய வைத்தார். போலீசார் சுமார் ஒரு மணிநேரம் சோதனைக்குப் பிறகு அது வதந்தி என்பது தெரியவந்தது.

வெடிகுண்டு சிக்கவில்லை
அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் தான் தொலைபேசியில் வந்த மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. அதேபோல் திருவான்மியூரில் உள்ள அஜித்தின் வீட்டுக்கு திருவான்மியூர் போலீசார் சென்று சோதனை செய்தனர். அங்கும் வெடிகுண்டு சிக்கவில்லை. அதுவும் புரளி என தெரியவந்தது. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண் மரக்காணம், புதுச்சேரி பகுதியில் இருப்பதாகத் தெரியவந்தது.

நடிகர் விஜய் வீட்டுக்கும்
மிரட்டல் விடுத்த நபர் பற்றி போலீசார் விசாரணையில் நடத்தினர். அவர் மரக்காணத்தை சேர்ந்த புவனேஸ்வரன் எனத் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட புவனேஸ்வரன், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டுக்கும் இதுபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்படவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications