1500 பிரிண்டுகள்... தமிழகத்தில் 350 அரங்குகளில் வெளியாகிறது வீரம்!
சென்னை: அஜீத்தின் வீரம் படம் 1500 பிரிண்டுகள் தயாராகிறது. தமிழகத்தில் 350 அரங்குகளில் வெளியாகிறது இந்தப் படம்.
அஜித், தமன்னா, சந்தானம், விதார்த் உள்பட பலரும் நடித்துள்ள படம் வீரம். இந்தப் படத்தை சிவா இயக்கியிருக்கிறார்.
பாரம்பர்யமிக்க விஜயா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார்.
இப்படம் ஜனவரி 10ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வரவிருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஒருபுறம் நடக்க, படத்துக்கான விளம்பரப் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது படக்குழு.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் வெங்கட்ராமரெட்டி கூறுகையில், "நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜீத் கிராமிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படம், நான்கு அண்ணன் தம்பிகளுக்கிடையிலான பாசத்தைச் சொல்லும் படம்.
இந்தப் படத்துக்காக அஜீத் கொடுத்த ஒத்துழைப்பு, எடுத்த ரிஸ்க் அத்தனையும் மறக்க முடியாதது.
படத்தில், இடம்பெறும் ரயில் சண்டை காட்சிக்காக ஒரு ரயிலையே வாடகைக்கு எடுத்தோம். ஓடும் ரயிலில் டூப் கூட இல்லாமல் அஜீத் போடும் சண்டைக்காட்சி நீண்ட நாளைக்கு பேசப்படும்.
இந்தப் படம் அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்கும்,' என்றவர், 1500 பிரிண்டுகள் இந்தப் படத்துக்காக போடப்படுவதாகவும், அவற்றில் தமிழகத்தில் மட்டும் 500 அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
ஆனால் 350 அரங்குகள் மட்டுமே கிடைத்திருப்பதாகவும், கூடுதல் திரையரங்குகளைப் பெற முயன்று வருவதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications












