விஜய்யின் அரசியல் மாநாடு பேச்சு.. திராவிட மாடலை ஆதரிக்கிறாரா அஜித்?.. பஞ்சாயத்து வேற மாதிரி போகுதே
சென்னை: விஜய் சமீபத்தில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தினார். அதில் பேசிய விஜய், திராவிட மாடல் என்ற வார்த்தையை குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். அதனையடுத்து தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுகவை அவர் எதிர்க்கிறார் என்ற எண்ணம் அனைவரிடமும் உருவாகிவிட்டது. இந்தச் சூழலில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு ட்வீட்டை போட்டிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக களம் காண்கிறது. சூழல் இப்படி இருக்க கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் மொத்தம் எட்டு லட்சம் பேர் கலந்துகொண்டதாகவும்; 80 கோடி ரூபாய்வரை விஜய் அம்மாநாட்டுக்காக செலவழித்ததாகவும் கடந்த சில நாட்களாகவே பேச்சு ஓடுகிறது. இதையெல்லாம் மீறி விஜய்யின் பேச்சுதான் தமிழ்நாடு அரசியல் களத்தில் ஹாட் டாபிக்காக இருக்கிறது.

என்ன பேசினார்?: மாநாட்டில் பேசிய விஜய் தங்களது கொள்கைகள், வழிகாட்டிகள் குறித்து பேசினார். அதேபோல் பிளவுவாத அரசியல் நடத்தும் சக்திகளை அப்புறப்படுத்துவோம் என்றும் முழங்கினார். அதுவரை அவரது பேச்சு எந்த சிக்கலையும் சந்திக்கவில்லை. ஆனால் ’அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?’, 'திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு ஏமாற்றுகிறீர்கள்’ என்று தமிழ்நாட்டை ஆளும் கட்சியான திமுகவை ஓபனாகவே அடித்தார். அவரது இந்தப் பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் மீது சந்தேகம்: விஜய்யின் அந்தப் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்திருக்கிறது. முக்கியமாக அவரை ஜோசப் என்று கூறி மத வட்டத்துக்குள் பாஜகவின் ஹெச்.ராஜா அடைத்தபோது இதே திராவிட மாடல்தான் விஜய்க்கு ஆதரவாக நின்றது. இப்போது அவரது பேச்சை பார்க்கையில் இவர் பாஜகவின் ஆதரவாளராக போகப்போக மாறிவிடுவாரோ என்ற சந்தேகம் எழுவதாக ஒருதரப்பினர் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
உதயநிதி ட்வீட்: இந்தச் சூழலில் துபாயில் நடக்கவிருக்கும் கார் பந்தயத்தில் அஜித் தனது அணியுடன் பங்கேற்கவிருக்கிறார். அதில் அவர்கள் பயன்படுத்தும் ஹெல்மெட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முத்திரை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு துணை முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி தனது எக்ஸ் தளத்தில், “உலக அளவில் சிறப்புக்குரிய துபாய் கார் பந்தயத்தில் பங்கேற்கவிருக்கும் நடிகர் அஜித்துக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.
மகிழ்ச்சி: நமது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை அஜித்குமார் ரேசிங் யூனிட்டின் கார், ஹெல்மெட், உபகரங்களில் இடம்பெற செய்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தோம். இதனால் தமிழ்நாடு மேம்பாட்டு துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தியிருக்கிறார் அஜித். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும்.
விஜய்யை எதிர்க்கும் அஜித்?: விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட்டை பார்த்த பலரும் திராவிட மாடலை எதிர்த்த விஜய்க்கு எதிராக அஜித்தை உதயநிதி நிறுத்துகிறாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். அதுமட்டுமின்றி அஜித் தனது உபகரணங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையின் லோகோவை பதித்திருப்பதன் மூலம் விஜய்யின் திராவிட மாடல் எதிர்ப்பு பேச்சுக்கு மறைமுகமாக தனது எதிர்ப்பை பதிவு செய்கிறாரோ என்றும் ஒருதரப்பினர் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
அதுமட்டுமின்றி விஜய்யின் மாநாட்டில் அஜித்தின் ரசிகர்களும் பலர் கலந்துகொண்டார்கள். மேலும் தலயின் ரசிகன், தளபதியின் தொண்டன் என்ற கட் அவுட்டுகளையும் பார்க்க முடிந்தது. இதனால் ஏகேவின் ரசிகர்களும் ஒருவேளை விஜய் பக்கம் சென்றுவிடுவார்கள் என்ற பயத்திலும், பதற்றத்திலும்தான் அஜித்துக்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்திருக்கிறாரோ என்றும் பலர் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











