Ajith Vijayakanth: “மிரட்டினாலும் பாசம் குறையாது..” அஜித்தை தோளோடு அரவணைத்துக்கொண்ட விஜயகாந்த்!
சென்னை: நேற்று காலை உயிரிழந்த கேப்டன் விஜயகாந்தின் உடல் தீவுத் திடலில் வைக்கப்பட்டுள்ளது. விஜய், ரஜினி, இளையராஜா ஆகியோர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து அஜித்தும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார் என சொல்லப்படுகிறது. இதனிடையே அஜித்துடன் விஜயகாந்த் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
அஜித்தை அரவணைத்துக்கொண்ட கேப்டன்: தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த கேப்டன் விஜயகாந்த், சினிமாவிலும் அதிரடியாக களமிறங்கினார். ஒரு கட்டத்தில் சினிமா, அரசியல் என இருபக்கமும் கவனம் ஈர்த்து வந்த விஜயகாந்த், சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனையடுத்து விஜயகாந்தின் உடலுக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நேற்று முழுவதும் தேமுதிக அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடல், தற்போது தீவுத் திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவோடு இரவாக விஜய், இளையராஜா ஆகியோர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து காலையில் தீவுத் திடல் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியதோடு அவர் குறித்து நெகிழ்ச்சியாகவும் பேசியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் அஜித் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வரவிருப்பதாக செய்திகள் வெளியாகின. நண்பகல் 1 மணிக்கு விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கவுள்ளது. ஆனால், அஜித் இன்னும் வந்ததாகத் தெரியவில்லை. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றுள்ளார் அஜித். இதனால் அவர் வருவது சந்தேகம் தான் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் அஜித்துடன் விஜயகாந்த் இருக்கும் த்ரோபேக் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அது 2002ம் ஆண்டு நெய்வேலியில் நடைபெற்ற காவிரி நீர் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ எனத் தெரிகிறது. அஜித்தை தோளோடு தோளாக அரவணைத்துக்கொண்டு, காதோடு ரகசியம் பேசுகிறார் விஜயகாந்த். அவரது பேச்சுக்கு மறு பேச்சில்லாமல் தலையை ஆட்டியபடி அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கிறார் அஜித். ட்விட்டரில் ட்ரெண்டாகும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
முன்னதாக நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக தமிழ்த் திரையுலகம் சார்பில் சிங்கப்பூர், மலேஷியாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் ரஜினி, கமல், விஜய் உட்பட ஒட்டுமொத்த திரையுலகையும் சிங்கப்பூர், மலேஷியாவுக்கு அழைத்துச் சென்றார் விஜயகாந்த். அப்போது அஜித்தையும் நேரில் சென்று அழைத்துள்ளார் கேப்டன். ஆனால் அஜித்தோ சிங்கப்பூர் வரவில்லை என்றும், அதற்காக நடிகர் சங்க கடனை அடைக்க தனது பங்காக 10 லட்சம் ரூபாய் தருவதாகவும் விஜயகாந்திடம் அஜித் கூறியுள்ளார்.

இதனால் டென்ஷனான விஜயகாந்த், உங்களிடம் பணம் கேட்டு வரவில்லை, கலை நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என அழைப்பு கொடுக்க வந்தேன் என அஜித்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அஜித்தின் வீட்டிற்கே சென்று மிரட்டியுள்ளார் கேப்டன். கலை நிகழ்ச்சிக்கு வராவிட்டால் உங்களுடைய படம் வெளியவே வராது என்றும் விஜயகாந்த் சொன்னதாக தெரிகிறது. ஆனாலும் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் அஜித்தை தோளோடு தோளாக விஜயகாந்த் அரவணைத்துக்கொண்டது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


Click it and Unblock the Notifications











