‘தல’ படத்திற்கு தலைப்பு வைப்பதில் இத்தனை குழப்பமா?
எந்த ஒரு படத்திற்குமே இப்படி ஒரு குழப்பம் வந்திருக்காது. படத்திற்கு பூஜை போடும்போதே தலைப்பை முடிவு செய்துவிடுவார்கள். ஆனால் அஜீத்- விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவாகியிருக்கும் புதிய படத்திற்கு தினம் ஒரு தலைப்பை சூட்டி உலாவ விடுகின்றனர்.
தொலைக்காட்சியில் சினிமா குவிஸ் நடத்தும் வெங்கட் பிரபு சமீபத்தில் இது குறித்து கேள்வி கேட்டதற்கு, படத்திற்கு தலைப்பு வைத்துவிட்டதாகவும், அதை உரிய நேரத்தில் வெளியிடுவோம் என்று கூறி தப்பித்துவிட்டார்.
முதலில் சுராங்கனி, அப்புறம் வலை, இப்போது சிவந்த மண் என வரிசையாக பெயர் சூட்டுகின்றனர். அதை விட கொடுமை பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வேறு போடுகின்றனர். படத்தின் தலைப்பை வைக்கவே இவ்வளவு குழப்பம் என்றால் படத்தின் கதை எப்படி இருக்கும் பார்க்கிற மாதிரி இருக்குமா? என்ற கேள்வி சினிமா ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஆகஸ்டில் சுராங்கனி
தினம் ஒரு பரபரப்பு செய்தி. அஜித்-விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவாகும் படப்பிடிப்பில் காயம் என்றெல்லாம் ஒருபுறம் செய்தி வெளியாகி வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட்டில் இந்த படத்திற்கு சுராங்கனி என்று பெயர் வைத்து பர்ஸ்ட் லுக் ரிலீசானது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களோ இதைப் பற்றி வாய் திறக்கவில்லை.

வலை பொருத்தமா இருக்குமோ?
இந்நிலையில் படத்தின் தலைப்பு வ என்ற எழுத்தில் துவங்கும் என்று கூறப்படுகிறது. வ என்ற எழுத்தில் துவங்கிய வாலி, வில்லன் ஆகிய படங்கள் அஜீத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதே சென்டிமென்ட் ஆக புதிய படத்திற்கும் அதே வ என்ற எழுத்தில் பெயர் தேடினார்கள். தற்போது படத்திற்கு வலை என்ற பெயரைத் தேர்வு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தில் அஜீத் ஹேக்கராக நடிப்பதால் வலை என்ற தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுகிறார்களாம்.

சிவந்த மண் சிக்குமோ?
அதேசமயம் இப்போது 'சிவந்த மண்' என்ற பெயரை தேடிக் கண்டுபிடித்திருப்பதாக சொல்கின்றனர். இது சிவாஜி நடித்த சிவந்த மண்' தலைப்புதான் தற்போது அஜீத்தின் சிவந்த மண் ஆகப் போகிறது. மறைந்த மாபெரும் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் மனைவியிடம் இப்போது அனுமதி கேட்டிருக்கிறார்களாம். நம்பிக்கையோடு காத்திருக்கிறது 'அஜீத்தின் சிவந்த மண்' வட்டாரம். எத்தனையோ பேரிடம் நோ அப்ஜெக்சன் வாங்க வேண்டியுள்ள இந்த காலத்தில் அவ்வளவு சீக்கிரம் இந்த தலைப்பு கிடைத்து விடுமா என்று தெரியவில்லை.

சீக்கிரம் சொல்லுங்கப்பா
பெயர் குழப்பம் உள்ள இந்தப் படத்தில் அஜித் ஹேக்கர் ஆக மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அஜித்துடன் டாப்சீ, நயன்தாரா,ஆர்யா போன்றோரும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் தெலுங்கு நடிகர் ராணாவும் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. படத்தின் தலைப்பை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் படத் தலைப்பை முடிவு செய்யாவிட்டால் இஷ்டத்திற்கு இதுபோன்ற தலைப்புகள் வெளியாகும் என்கின்றனர் சினிமா விமர்ச்சகர்கள்.

தளபதி பிரச்சினை முடிஞ்சது
இதே போல தலைப்பு பிரச்சினை ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கும் ஏற்பட்டது. தங்கமகன், தளபதி என்றெல்லாம் முடிவாகி இப்போது ஒருவழியாக ‘தலைவா' என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் வெளியிட்டுவிட்டனர். இன்றைய சூழ்நிலையில் படம் எடுப்பது கூட ஈசியாகிவிட்டது தலைப்பு வைப்பதுதான் பெரும் சிக்கலாக இருக்கும் போலிருக்கிறதே!


Click it and Unblock the Notifications











