Ajith: ஈரான் - இஸ்ரேல் மோதல்: துபாயில் இருக்கும் அஜித் பாதுகாப்பாக இருக்கிறாரா? சுரேஷ் சந்திரா விளக்கம்
துபாய்: ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் ஏவுகணைத் தாக்குதல்கள் உலக நாடுகள் முழுவதும் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் துபாய், அபுதாபி, கத்தார் போன்ற நாடுகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் ஐக்கிய அமீரக நாடுகளில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளார்களா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதேபோல் சினிமா பிரபலங்கள் பலரும் துபாயில் தான் உள்ளனர். நடிகர் அஜித்திற்கு அங்கு வீடே உள்ளது. அவர் தனது கார் ரேஸ்க்காக அங்கேயே தங்கி உள்ளார். இன்னும் சொல்லப்போனால் கடந்த ஆண்டில் ஐபிஎல் போட்டியின் போது, அவருக்கு பத்ம விருது வழங்கப்பட்ட போதும் தான் இந்தியாவுக்கு வந்தார்.

இந்த ஆண்டில் அவர் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. கார் ரேஸில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கையில் நடிகர் அஜித் தற்போது துபாயின் பதற்றமான சூழலில் பாதுகாப்பாக இருக்கிறாரா என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. பலரும் இது தொடர்பாக இணையத்தில் கேள்வி கேட்டு வந்தனர். இப்படி இருக்கையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு அளித்த பேட்டியில், அஜித் துபாயில் பாதுகாப்பாக இருக்கிறார் என்றும், ரசிகர்கள் அவரது பாதுகாப்பு குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். சுரேஷ் சந்திராவின் இந்த பேட்டி அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது.
மேலும் சுரேஷ் சந்திரா அந்த பேட்டியில், நடிகர் அஜித்தின் பயணத் திட்டத்தின் படி, அவர் இன்றைக்கு சென்னை திரும்புவதாக இருந்தது. ஆனால் தற்போது விமான சேவைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளதால், அவர் துபாயிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அவர் மிகவும் பத்திரமாகவே இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











