Ajith vs Vijay: விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் அஜித் ரசிகர்கள்.. மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்!
சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக உள்ள நடிகர்கள் என எடுத்துக் கொண்டால் அதில் விஜய் மற்றும் அஜித் பெயர் கட்டாயம் இருக்கும். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் தங்களது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர்கள். ஒரு காலத்தில் இருவருமே தீபாவளி, பொங்கல் என படங்களை ஒருவருக்கு எதிராக மற்றொருவர் படங்களை ரிலீஸ் செய்து வந்தனர். இதுமட்டும் இல்லாமல் இருவரும் தங்களது படங்களிலும் ஒருவரையொருவர் மறைமுகமாக எதாவது கூறுவதைப் போன்ற வசனங்களும் வைத்தனர். குறிப்பாக அஜித் தனது படத்தில் இடம் பெற்ற, " இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன" பாடல் முழுக்க முழுக்க விஜய்யை வம்பிழுப்பதற்காக உருவாக்கப்பட்ட பாடல் என்ற பேச்சு இப்போதும் உள்ளது.

இப்படி இருந்த நடிகர் அஜித் மற்றும் விஜய் ஒருகட்டத்தில் தங்களது படங்களை எதிரெதிராக ரிலீஸ் செய்வதை பொதுவாகவே தவிர்த்து வந்தனர். கடைசியாக கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடிப்பில் வாரிசு படமும் அஜித் நடிப்பில் துணிவு படமும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் ரிலீஸின் போதும் ரசிகர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அதேபோல் இரு தரப்பு ரசிகர்களுக்குள்ளும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகின்றது.

குறிப்பாக சமூக வலைதளங்களில் இதுபோன்ற நிகழ்வு தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது. ஒரு கட்டத்தில் நடிகர் அஜித் தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்துவிட்டு ரசிகர்கள் எனது படம் பிடித்திருந்தால் வந்து பாருங்கள். முதலில் உங்கள் குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என ஒரே அறிக்கையில் தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்தார். ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு படங்கள் கொடுத்து வந்த அஜித் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் கொடுத்து வருகின்றார். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகின்றார். இதில் விடாமுயற்சி தீபாவளிக்கும் குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் ரிலீஸ் ஆகவுள்ளது.

தவெக: ஆனால் விஜய் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என மாற்றி, மக்களுக்கு பல நற்பணிகளைச் செய்து வந்தார். தற்போது விஜய் தனது நற்பணி மன்றத்தினை தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியாக மாற்றி அரசியலில் களமிறங்கியுள்ளார். மேலும் தான் தற்போது ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்து முடித்துவிட்டு சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகிவிட்டு, அதன்பின்னர், முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தி கோட்: தற்போது அவரது நடிப்பில் உருவாகி வரும் படம் தி கோட். இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் எண்டர்டைமெண்ட் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கின்றார் என கூறப்படுகின்றது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கின்றார். இதுமட்டும் இல்லாமல் படத்தில் சினேகா, பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் விஜய்காந்த் இந்த படத்தில் ஏ.ஐ., மூலம் ஒரு முக்கிய காட்சியில் வருவதுபோல் படம் உருவாக்கப்படுகின்றது.

அஜித் ரசிகர்களின் போஸ்டர்: இந்நிலையில் மதுரையில் உள்ள அஜித் ரசிகர்கள் நடிகர் விஜய்யின் தி கோட் படத்திற்கு எதிராக போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது விஜய் ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், கோட் ப்ளாக்பஸ்டர் ஹிட் எல்லாம் நீ நெனச்சாலும் அமையாது. மங்காத்தா படம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடுத்து 13 ஆண்டுகள் ஆகின்றது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்தும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், " விடாமுயற்சியால் கிடைத்த மாபெரும் வெற்றி. இந்திய அணிக்கு வாழ்த்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டருக்கு சமூக வலைதளத்தில், " நடிகர்கள் நட்புடன் இருந்து வந்தாலும் ரசிகர்கள் இவ்வாறு சண்டையிட்டுக் கொள்வது எப்போதுதான் நிற்கும்" என கேள்வி எழுப்புகின்றனர்.



Click it and Unblock the Notifications











