சோகத்தில் அஜித்குமார்.. உடல்நலக்குறைவால் தந்தை மரணம்.. திரையுலகம் இரங்கல்
சென்னை: நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். படம் மெகா ஹிட்டாகி வசூலை வாரிக்குவித்தது. அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

அஜித் தந்தை சுப்ரமணியம்
அஜித்தின் தந்தை பெயர் சுப்ரமணியம். சுப்ரமணியத்திற்கு மொத்தம் மூன்று மகன்கள். அவர்களில் அஜித்குமார் இரண்டாவது மகன் ஆவார். மற்ற இரண்டு மகன்களின் பெயர் அனில் குமார், அனுப் குமார். இவர்களில் ஒருவர் தொழிலதிபதிராகவும், மற்றொருவர் ஐஐடி மெட்ராஸில் பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது.

அஜித்குமார் தந்தை மரணம்
அவர் அஜித்தின் பெசண்ட் நகர் வீட்டில் இவ்வளவு நாள்கள் வசித்துவந்தார். வயோதிகம் காரணமாகவும், பக்கவாத நோயாலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு முழு ஓய்வில் இருந்தார் சுப்ரமணியம். இந்தச் சூழலில் இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அஜித் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எங்கு இருக்கிறார் அஜித்? இறுதிச்சடங்கு எப்போது
அஜித்குமார் இப்போது தனது மனைவி ஷாலினியுடன் வேர்ல்ட் டூரில் இருப்பதாக தெரிகிறது. அவரது தந்தையின் இறுதிச்சடங்கு இன்று காலை பெசண்ட் நகரில் இருக்கும் அஜித்துடைய வீட்டில் நடைபெற இருக்கிறது. எனவே அஜித் தமிழ்நாடு திரும்பிவிட்டாரா இல்லை விரைவில் அவர் தமிழ்நாடு திரும்பிவிடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. தந்தையை இழந்திருக்கும் அஜித்துக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துவருகின்றனர்.

தனது குடும்பம் குறித்து பேசிய அஜித்குமார்
அஜித்குமார் தனது குடும்பத்தின் பின்னணி குறித்து பெரிதாக எப்போதும் பேசியதில்லை. ஆனால் அவர் நடிக்க ஆரம்பித்த புதிதில் கொடுத்த பேட்டி ஒன்றில், "என்னை எல்லோரும் தமிழன் இல்லை என்கிறார்கள். எனது தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர். எனது அம்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். எனவே நான் தமிழன்தான்" என அந்தப் பேட்டியில் அஜித் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











