அஜித் குமாரா இது?.. கனவை வென்றவன் வேற என்ன சார் பண்ணுவான்.. வெற்றி பெற்ற அந்த ஒரு நொடி ரியாக்ஷன்!
துபாய்: இணையத்தில் எந்தப் பக்கம் நுழைந்தாலும் அஜித்குமார் பற்றிய செய்திகள்தான் டன் கணக்கில் குவிந்து கிடக்கின்றது. 2025ஆம் ஆண்டுக்கான 24 மணிநேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார், மற்றும் அவரது அணியாக அஜித்குமார் ரேஸிங் அணி R பிரிவில் மூன்றாவது இடத்தினை வென்று, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளது. இதனால் அஜித்குமாருக்கும் அவரது அணிக்கும் இந்தியா மட்டும் இல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வாழ்த்து மழை பொழிந்து கொண்டு உள்ளது.
நடிகர் அஜித்குமாருக்கு அவரது இளமைக் காலத்தில் இருந்தே ரேஸ்கள் மீது பெரும் ஆர்வம். இதனால் தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம், கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ்களில் பங்கு பெறுவதை ஒரு வழக்கமாகவே கொண்டு வந்தார். இப்படியான நிலையில் இந்த ஆண்டுக்கான கார் பந்தயத்தில் தான் கலந்து கொண்டே ஆகவேண்டும் என திட்டம் தீட்டி, அதற்கான பணிகளை சில ஆண்டுகளுக்கு முன்னரே அஜித் தொடங்கிவிட்டார். இப்படியான நிலையில், அவரது பெயரில் அஜித்குமார் ரேஸிங் என்ற அணியை உருவாக்கி கலந்து கொண்டுள்ளார்.

இந்த அணிக்கு அவர் உரிமையாளர் மட்டும் இல்லாமல், கேப்டனாகவும் செயல் பட்டு வருகின்றார். உலகின் பல்வேறு நாடுகளில் வரும் அக்டோபர் மாதம் வரை நடைபெறவுள்ள இந்த கார் பந்தயத்தில் அஜித்குமார் மற்றும் அவரது அணி கலந்து கொள்ளவுள்ளது. இப்படியான நிலையில் அஜித்குமார் மற்றும் அவரது அணி முதல் போட்டியில் R பிரிவில் மூன்றாவது இடத்தினை வென்று அசத்தியுள்ளது. இந்த போட்டியை அஜித்திற்காக நேரில் பார்க்க அஜித் குடும்பத்தினர் மட்டும் இல்லாமல், நடிகர் மாதவன் உள்பட பலர் சென்றிருந்தனர். மேலும் எண்ணற்ற ரசிகர்களும் சென்றிருந்தனர்.

விபத்து: அஜித்குமாரைப் பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரத்தில் குதித்தனர், மேலும் ஏ.கே, ஏ.கே என கோஷமிட்டனர். போட்டி நாளுக்கு சில நாட்களுக்கு முன்னர், அஜித் பயிற்சி மேற்கொண்டபோது அவரது கார் பக்கவாட்டுத் தடுப்புச் சுவரில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியது. அந்தக் காட்சிகள் பார்ப்பவர்கள் மனதில் பெரும் பயத்தினை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக அந்த விபத்தில் அஜித்துக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

3வது இடம்: இப்படியான நிலையில் கார் பந்தயத்தில் அஜித்குமார் அணி மூன்றாவது இடத்தினை வென்றது. பந்தயம் முடிந்ததும் அவரது அணியினர் தங்களது பிரத்யேக அறையில் போட்டி முடிவுகளைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது அஜித்குமாரின் அணி 3வது இடம் என முடிவுகளில் இருந்ததைப் பார்த்து ஒட்டுமொத்த அணியினரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் குதித்தனர்.
கனவு: குறிப்பாக அஜித் இந்த வெற்றியை சிறு குழந்தைபோல கொண்டாடினார். தனது அணியினருடன் சேர்ந்து கொண்டு கட்டித் தழுவி குதிப்பது, கத்தி ஆரவாமிடுவது என அஜித்தின் நடவடிக்கைகளைப் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது. இது தொடர்பான வீடியோக்களை அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த இணையவாசிகள், தனது பலநாள் கனவை வென்றவன் வேற என்ன சார் பண்ணுவான் என கமெண்ட் அடித்து வருகின்றனர். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











