Ajithkumar: வாழ்க்கையில் மட்டுமல்ல கார் ரேஸிலும் இவர்தான் எனக்கு ரோல் மாடல்.. மனம் திறந்த அஜித்
சென்னை: நடிகர் அஜித்குமார் (Ajithkumar ) மற்றும் அவரது கார் ரேஸிங் அணியான அஜித்குமார் ரேஸிங் (Ajithkumar Racing) அணி இன்று முதல் அதாவது ஜனவரி 10ஆம் தேதி முதல் 24 மணி நேர கார் ரேஸ் பந்தயமான, 24H Series Dubai 2025இல் கலந்து கொள்கின்றது. இதற்காக அஜித் தனது உடல் எடையை பெருமளவு குறைத்தது மட்டும் இல்லாமல், கடந்த பல ஆண்டுகளாக திட்டம்போட்டு தயாராகியுள்ளார். இந்நிலையில் அஜித்குமார் தனது வாழ்க்கையின் ரோல் மாடலாக மறைந்த கார் ரேஸர் ஆரிடன் செனா என்பவர் குறித்து பழைய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
அஜித்குமார் தற்போது கலந்து கொண்டிருக்ககூடிய ரேஸில் மொத்தம் 24 மணி நேரம் காரினை ஓட்டவேண்டும். அவரது அணியில் அவருடன் மொத்தம் 4 வீரர்கள் உள்ளனர். அணியின் கேப்டனாக அஜித் செயல்படுகின்றார். இப்படியான நிலையில் அஜித்குமார் ரேஸிங் அணி இந்த கார் ரேஸில் வெற்றி பெற உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அஜித்துக்கு இந்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக உள்ளது. கார் ரேஸ் பந்தயம், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் ரிலீஸ் என அஜித்குமாருக்கு இந்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகின்றது. இப்படியான நிலையில் அஜித்குமார் ஏற்கனவே அளித்த பேட்டி ஒன்றில், தனது வாழ்க்கையில் ரோல் மாடல் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

ரோல் மாடல்: அதாவது கேள்விக்கு அஜித் அளித்த பதில், “ நான் வாழ்க்கையில் பலரிடம் இருந்து பலவற்றைக் கற்றுக் கொண்டுள்ளேன். ஆனால் வாழ்க்கையில் ரோல் மாடல் என ஒருவரை சுட்டிக் காட்டவேண்டும் என்றால் அது, கார் ரேஸர் ஆரிடன் செனா அவர்கள்தான். அவரது பேட்டிகளை நான் பலவற்றைப் பார்த்துள்ளேன். அவரது புத்தகங்களை நான் வாசித்துள்ளேன். அவை அனைத்தும் மிகவும் அர்த்தமானதாகவும் ஆழமானதாகவும் இருக்கும். அவர் இப்போது உயிருடன் இல்லை. ஆனால் அவரைத்தான் எனது வாழ்க்கையிலும் கார் ரேஸிலும் ரோல் மாடலாக ஏற்றுள்ளேன். இவர் இல்லாமல் சினிமாவில் கமல்ஹாசன் சார், ரஜினிகாந்த் சார் ஆகியோரை நான் ரோல் மாடலாக ஏற்றுக்கொண்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

வேகம்: இதுமட்டும் இல்லாமல், அவரிடம் கார் ரேஸில் நீங்கள் அதிகமாக எந்த அளவுக்கு வேகத்தில் சென்றுள்ளீர்கள் என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், நான் ஃபார்முலா 3 ரக கார்களைத்தான் ஓட்டியுள்ளேன். அந்த வகை போட்டிகளில்தான் பங்கேற்றும் உள்ளேன். அதில் அதிகபட்சமாக மணிக்கு 290 கிலோமீட்டர் முதல் 300 கிலோமீட்டர் வரையில் வேகமாக ஓட்டியுள்ளேன். அந்த அளவுக்கு திறன் வாய்ந்த கார்கள். நீங்கள் கற்றுக் கொண்டால் அந்த அளவுக்கு வேகமாக செல்லலாம். செல்ல முடியும், எவ்வளவு வேகமாக போனாலும், பயிற்சி செய்வதால் எதிரில் வருவதும் போவதும் நன்றாகவே தெரியும் எனக் கூறினார். அஜித்குமார் கார் ரேஸில் கலந்து கொண்டுள்ள இந்த சமயத்தில் அவரது இந்த பேட்டி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications











