Vidaamuyarchi Review: விடாமுயற்சி! விரதம் இருந்த ரசிகர்களுக்கு விருந்து..செய்யாறு பாலு பளீச் ரிவ்யூவ்
சென்னை: அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் தான் இன்றைக்கு இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் படம் ரிலீஸ் ஆகியுள்ளதால், ரசிகர்கள், படத்தை கொண்டாடி வரவேற்றுள்ளனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை லைகா தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன் மற்றும் ஆரவ் என பலர் நடித்துள்ளனர். படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் படம் பார்த்த விமர்சகர் செய்யாறு பாலு தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " இயக்குநர் மகிழ் திருமேனி தனது பல பேட்டிகளில் கூறிய விஷயம், படத்தில் மாஸ் காட்சிகள் எல்லாம் இல்லை. படத்தை சாதாரணமாக பார்க்க வாருங்கள் எனக் கூறினார். ஒரு மாஸ் ஹீரோவை இயக்கிவிட்டு இப்படிச் சொல்கிறாரே என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இரண்டரை மணி நேரம் படம் ஓடுகிறது. அஜித்திற்கு மாஸான இண்ட்ரோ, பில்டப் டயலாக், இண்ட்ரோ பாடல் என எதுவும் இல்லை. அஜித்தின் முதிர்ச்சியை வயதுக்கான பக்குவத்தை இதில் புரிந்து கொள்ள முடிகிறது. சினிமாவின் தன்மை மாறிவிட்டது எனப் புரிந்து நடித்துள்ளார்.

விடாமுயற்சி படத்தின் கதை என்னவென்றால், விவாகரத்து பெறுகின்றேன் என த்ரிஷா விவாகரத்திற்கு விண்ணப்பிக்கின்றார். அதன் பின்னர், த்ரிஷா தனது அம்மா வீட்டிற்கு போக நினைக்கின்றார். அவரை, அஜித்தே கொண்டு போய் விடுகிறார். 9 மணி நேர பயணத்தில் என்ன நடக்கிறது என்பது கதையாக உள்ளது. இதற்கிடையில் த்ரிஷா கடத்தப்படுகிறார். தனது மனைவியை அஜித் தேடுகின்றார். த்ரிஷா விவாகரத்துக்கு விண்ணப்பிக்க காரணம், அவருக்கு வேறு ஒருவருடன் உறவு உள்ளது என்பதால்தான். பிரேக் டவுன் படத்தின் ஒன் லைன், மட்டும் எடுத்துக் கொண்டு தனது அட்டகாசமான திரைக்கதையால் படத்தை உருவாக்கியுள்ளார். யார் வில்லன்? யார் நல்லவன்? யார் கெட்டவன் என யூகிக்க முடியவில்லை. மகிழ் திருமேனி மீண்டும் தனது திரைக்கதையால் தன்னை நிரூபித்துள்ளார்.
அதகளம் செய்யும் அஜித்: அஜித் இதற்கு முன்னர் நடித்த படங்களில் கெட்டப்பை மாற்றுவது, சாதாரணமாக நடிப்பது எல்லாம் இருந்தது. ஆனால் இந்தப் படத்தில் தன்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்துள்ளார். எந்த கதாநாயகன் ஒத்துக் கொள்வார் எனத் தெரியவில்லை. ஆனால் அஜித்தைப் பார்த்து, பூமர் எனக் கூறுகின்றனர். அப்போது தியேட்டரே தெறிக்கின்றது. இப்படியான காட்சிக்கு அஜித் போன்றவர் ஒத்துக் கொண்டு நடித்ததற்கு பிரமாதமான கைதட்டல் கிடைத்தது. படத்தை முழுக்க முழுக்க மகிழ் திருமேனியிடம் அஜித் ஒப்படைத்து விட்டார் என்றுதான் கூறவேண்டும். இந்தப் படத்தின் திரைக்கதைக்கு அஜர்பைஜான் தான் சரியான கதைக்களம் என்பது படம் பார்க்கும்போது புரியும்.

ஹாலிவுட் படம்: மிகவும் பிரமாதமான இடைவேளை காட்சி உள்ளது. அதற்குப் பின்னர் அஜித்தின் அதகளம்தான். படத்தில் யார் வில்லன் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஒரு கட்டடத்திற்கு மேல், வில்லன் யார் எனத் தெரிந்துவிடும். படத்தில் சின்ன மைனஸ் என்றால், ஆரம்பத்தில் வரும் 20 நிமிடங்கள் தான். விடாமல் முயற்சி செய்தால் நாம் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என எவ்வளவோ கதைகள் சொல்லியாச்சு, அந்த வரிசையில் இந்தப் படமும் உள்ளது. படத்தின் டெக்னிக் வேலைகளைப் பார்க்கும்போது, ஹாலிவுட் படத்தைப் பார்ப்பதைப் போல் இருந்தது. அஜித்துக்கு எந்த ஃப்ரேம் வைத்தாலும் அழகாக உள்ளார். படத்தின் இன்னொரு பிளஸ் பாய்ண்ட் என்றால் அது, அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு பிளஸ். மிகவும் அழகாக அஜர்பைஜானைக் காட்டியுள்ளார்.
யுனிவர்சல்: படத்தில் மொத்தமாக 10 கதாபாத்திரங்கள்தான் உள்ளது. அனைத்து கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளனர். படத்தை ஹாலிவுட் படத்தின் தரத்திற்கு எடுத்துள்ளார்கள். இந்தப் படத்தை யுனிவர்சல் படம் என்றே கூறலாம். படத்தை குடும்பத்துடன் தாராளமாக பார்க்கலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











