Vidaamuyarchi FDFS: அஜித் சொல்லியும் திருந்தல.. மீண்டும் க... அஜித்தே.. விடாமுயற்சி ரசிகர்கள் அலப்பறை
ஆந்திரா: அஜித் குமார் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ரிலீஸ் ஆகியுள்ள படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஆங்கிலப் படமான பிரேக் டவுன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என கூறப்படுகிறது. படத்தை லைகா தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், அஜித்துடன் த்ரிஷா, ஆரவ், அர்ஜுன் மற்றும் ரெஜினா என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் இன்று ரிலீஸ் ஆக உள்ள நிலையில், ஆந்திராவில் அதிகாலைக் காட்சியைப் பார்க்க, தியேட்டரில் குவிந்த ரசிகர்கள், தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.
ஒரு ரசிகர் கூறும்போது, " எந்த ஒரு நடிகரும், முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள். அதன் பின்னர் எனது படங்கள் பிடித்தால் வந்து பாருங்கள் எனக் கூறுவார்களா? ஆனால் எங்கள் அஜித் கூறுகிறார். அதற்காகவே அவரை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தோம். ஆனால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாதது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும், படம் இப்போது ரிலீஸ் ஆகியிருப்பது மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது" எனக் கூறியுள்ளார்.

விடாமுயற்சி: மற்றொரு ரசிகர் பேசும்போது, " எங்களுக்கு அஜித் படத்தின் வெற்றி தோல்வி எல்லாம் முக்கியமே இல்லை. அஜித்தை நாங்கள் திரையில் பார்க்க வேண்டும். அவ்வளவுதான் அதற்காகத்தான் நாங்கள் வந்துள்ளோம். எங்களுக்கு அஜித் தரிசனம் மட்டும் போதும் எனக் கூறியுள்ளார். ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால், மேளதாளங்களுடன் ஆட்டம் போட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

அஜித்தே : இதற்கிடையில் சில ரசிகர்கள் அஜித்தின் பேனருக்கு மாலை அணிவித்து, திஷ்டி பூசணிக்காய் உடைத்து, பால அபிஷேகம் செய்தனர். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் கடவுளே.. அஜித்தே.. உயிரே.. அஜித்தே.. என கோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இதுபோன்று, தன்னை ரசிகர்கள் கொண்டாடவேண்டாம் என ஏற்கனவே அஜித் அறிக்கை ஒன்றை விட்டிருந்தார்.

பத்ம பூஷன்: அதேபோல் மற்றொரு ரசிகர் பேசும்போது, " அஜித்தின் விடாமுயற்சி படம் மட்டும் இல்லை, இனிவரும் அனைத்து படங்களும் வித்தியாசமான முறையில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அஜித்க்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியாகும் படம் என்பதால், படத்தின் மீது இந்தியா முழுவதுமே பெரும் கவனம் குவிந்துள்ளது. படம் கட்டாயம் வெற்றி படமாக மாறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ரசிகர் மன்றத்தை கலைத்த பின்னர் கூட, அஜித்திற்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்றால், அது இவர் ஒருவருக்குத்தான். எங்கள் நாடி நரம்பு எல்லாம் அஜித் தான் இருக்கின்றார். குட் பேட் அக்லி இன்னும் சில மாதங்களில் ரிலீஸ் ஆகவுள்ளதால், நாங்கள் இன்னும் ஆவலாகவும் ஆர்வமாகவும் உள்ளோம்" எனக் கூறினார்.



Click it and Unblock the Notifications











