விடாமுயற்சி படத்தில் அஜித் கையால ஒருத்தர் கூட சாக மாட்டாங்க.. ஆடியன்ஸுக்கு அது புரியல.. பிரபலம் ஓபன்!
சென்னை: அஜித் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன படம் விடாமுயற்சி. இந்தப் படத்தைப் பார்த்த பலரும் படம் குறித்து கலவையான விமர்சனங்களை முன்வைத்தனர். இது படத்தின் வசூலிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில், படத்தின் தன்மை குறித்து ரசிகர்கள் புரிந்து கொள்ளாமல் படம் பார்க்க வந்து விட்டார்கள் என தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
லைகா தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான படம் விடாமுயற்சி. இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் கடந்த 6ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படம் பிரேக் டவுன் என்ற படத்தின் தழுவல் என்றாலும், ரசிகர்களுக்கு படம் பெரிய அளவில் ஈர்ப்பினை ஏற்படுத்தவில்லை. காரணம் படத்தில் அஜித்திற்கு என தனி மாஸான காட்சிகள் இல்லை என்பதுதான்.

ஆனால் படம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் போது, இயக்குநர் மகிழ் திருமேனி, படம் குறித்தும் படத்தின் தன்மை குறித்தும் விளக்கமாக கூறியிருந்தார். அதாவது, விடாமுயற்சி வழக்கமான அஜித் படம் இல்லை. இதில் அஜித்துக்கு என தனியாக மாஸ் காட்சிகள், மாஸான டயலாக்குகள் என எதுவும் இல்லை. ஒரு சாதாரண மனிதன், தனக்கு வரும் பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதையே. என படம் குறித்தும் படத்தை ரசிகர்கள் எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து பல பேட்டிகளில் தெளிவாக கூறியிருந்தார்.

தனஞ்ஜெயன்: இப்படியான நிலையில் படம் பார்த்த ரசிகர்கள், படத்தில் அஜித்திற்கு என மாஸான காட்சிகள் இல்லை, மாஸ் டயலாக்குகள் இல்லை, இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு இந்தப் படம் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனக் கூறினர். இப்படியான நிலையில் தான், ரசிகர்களின் கமெண்ட் குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், கூறியுள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

விடாமுயற்சி: அதாவது இது தொடர்பாக அவர் பேட்டி ஒன்றில் பேசுகையில், " விடாமுயற்சி படம் குறித்து இயக்குநர் மகிழ் திருமேனி பல சேனல்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியது எல்லாம், " இது வழக்கமான அஜித் படம் இல்லை. படத்தில் மாஸான எலமெண்ட் என எதுவுமே இருக்காது. ரசிகர்கள் படத்தில் மாஸ் காட்சிகள் இருக்கும் என நினைத்து வரவேண்டாம் எனக் கூறினார். ஆனால் ரசிகர்கள் அதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் வந்து படம் பார்த்துவிட்டு, படத்தில் மாஸான காட்சிகள் இல்லை எனக் கூறுகிறார்கள்.

புரியல: ஆனால் படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் கொஞ்சம் கூட கதாநாயக கதாபாத்திர வடிவமைப்பு இல்லை. அதாவது சாதாரண மனிதனின் வாழ்க்கை, சாதாரண மனிதன் பிரச்னையை எதிர் கொண்டால் என்ன மாதிரி அணுகுவான் என்பதை படமாக்கியுள்ளனர். படம் முழுவதும் கவனித்தால் படத்தில் அஜித் ஒருவரைக் கூட கொல்ல மாட்டார். அஜித் கைகளால் ஒருவர் கூட இறக்க மாட்டார். அஜித் யாரையும் கொலை செய்ய மாட்டார். இப்படியான படத்தைக் கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் ரசிகர்களுக்கு இது புரியவில்லை" எனக் கூறினார். அவரது கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











