பிரபு ஒரு அப்பாவி.. எப்படி ஓகே சொன்னார்னு தெரியல.. மாமனார் பற்றி குட் பேட் அக்லி இயக்குநர் ஓபன் டாக்
சென்னை: அஜித்குமாரை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி நாளை உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இதற்கு முன்னர் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் தோல்வியை சந்தித்தது. அதேசமயம் ஆதிக் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இப்படி இரு வேறு ரிசல்ட்டுடையவர்கள் இணைந்து படம் செய்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கும் சூழலில்; ஆதிக் ரவிச்சந்திரன் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.
திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அந்தப் படம் சுமாரான வரவேற்பை மட்டுமின்றி பெரிய சர்ச்சையையும் சந்தித்தது. அதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை இயக்கினார். அதில் தமன்னா உள்ளிட்டோர் சிம்புவுடன் நடித்திருந்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தத் தோல்விக்கு சிம்புதான் காரணம் ஆதிக்கும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் ஓபனாகவே பேசினார்கள்.
மார்க் ஆண்டனி மெகா ஹிட்: ஆதிக்கின் முதல் இரண்டு படங்களுமே பஞ்சாயத்தைத்தான் சந்தித்தன. அப்படிப்பட்ட நிலைமையில் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரை வைத்து மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கினார் ஆதிக். டைம் டிராவல் ஜானரில் உருவாகியிருந்த அந்தத் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட அப்படம் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. மொத்தம் நூறு கோடி ரூபாயை வசூலித்தது. விஷாலின் கரியரில் இதுதான் முதன்முறையாக 100 கோடி ரூபாய் வசூலித்த படம் ஆகும்.

நடிகர் ஆதிக் ரவிச்சந்திரன்: இதற்கிடையே அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கியமான கேரக்டரிலும் நடித்திருந்தார் ஆதிக். அந்த சமயத்தில் தன்னிடம் இருந்த ஒன் லைனை ஏகேவிடம் சொல்ல அதற்கு ஏகேயும் ஓகே சொல்லிவிட்டார். அதனையடுத்து அந்த ஒன் லைனை டெவலப் செய்து குட் பேட் அக்லி படத்தின் கதையையும் எழுதி முடித்துவிட்டார். இதில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படமானது நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
பெரிய எதிர்பார்ப்பு: இதற்கு முன்னர் வெளியான விடாமுயற்சி திரைப்படம் சரியாக போகவில்லை. எனவே அதில் விட்டதை இதில் பிடித்துவிட வேண்டும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். ட்ரெய்லரில் இதுவரை அஜித் படங்களில் இடம்பெற்ற சில மாஸான பஞ்ச் டயலாக்குகளையும் காண நேர்ந்தது. எனவே இது ஒரு அஜித் சினிமாட்டிக் யுனிவர்ஸாக உருவாகியிருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏகே ரசிகர்கள் எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள். முன்னதாக ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணமும் நடந்தது. இந்நிலையில் தனது மாமனார் பிரபு குறித்து ஆதிக் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஆதிக்கின் பேட்டி: தனியார் வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "பிரபு ரொம்பவே இனிமையானவர். அதுமட்டுமின்றி அப்பாவியும்கூட. அவருடைய பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவரிடம் இருக்கும் அப்பாவித்தனத்தை வேறு யாரிடமும் பார்க்க முடியாது. அவரின் மருமகன் நான் என்பதையே சில நேரங்களில் மறந்துவிடுவேன். அவரை நான் முதன்முதலில் சந்தித்தபோது மார்க் ஆண்டனி திரைப்படம் ரிலீஸாகவில்லை. அந்தப் படத்தின் ரிலீஸின் ஒரு மாதம் முன்புதான் முதன்முறையாக பிரபுவை சந்தித்தேன்.
எந்த நம்பிக்கைல ஓகே சொன்னீங்க: அவரிடம் நான் எந்த நம்பிக்கையில் எனக்கு ஓகே சொன்னீர்கள் என்று பலமுறை கேட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் அவர் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. அஜித்துடன் பிரபு நீண்ட காலத்துக்கு பிறகு நடிப்பதில் அவரும் ஹேப்பியாக இருந்தார். அஜித்துக்குமே பிரபுவை ரொம்ப பிடிக்கும்" என்றார். குட் பேட் அக்லி படத்தில் பிரபுவும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











