ஒருவழியாக முடிந்தது பஞ்சாயத்து - நாளை வெளியாகிறது ஏகே 62 அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
சென்னை: அஜித் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் குறித்த பஞ்சாயத்து முடிந்துவிட்டதாகவும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. மக்களிடம் வங்கிகள் கொள்ளையடிப்பது பற்றி படம் உருவாகியிருந்தது. அஜித்துடன் வினோத் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்ற சூழலில் இந்தப் படம் மூலம் தன்னை நிரூபிக்க முனைப்போடு இருந்தார் இயக்குநர். அவர் எதிர்பார்த்தபடியே படமும் ரசிகர்களை திருப்திப்படுத்தியது.

100 கோடி க்ளப்பில் துணிவு
படம் அஜித் ரசிகர்களுக்கு ஏற்றவாறும், வங்கிகள் ஆடும் தகிடுதத்தங்கள் பற்றியும் எடுக்கப்பட்டிருந்ததால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்று 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்திருக்கிறது. இதனால் ஏகே ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

ஏகே 62 குறித்த அறிவிப்பு
இதற்கிடையே அஜித் துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அவரது அடுத்த படம் (ஏகே 62) குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க, நானும் ரௌடிதான் படம் மூலம் வரவேற்பைப் பெற்ற விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.

படத்திலிருந்து நீக்கப்பட்ட விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து எந்த மாதிரியான கதையை இயக்கப்போகிறார் என ஆர்வம் பலரிடம் எழுந்திருந்த சூழலில் விக்னேஷ் சிவன் சொன்ன முழு கதையும் அஜித்துக்கும், லைகா நிறுவனத்துக்கும் ஏற்றபடி இல்லை. எனவே அவரை நீக்குவது என முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் அதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்தது.

வெளியே சென்ற விக்னேஷ் சிவன்
இதற்கிடையே லைகா நிறுவனத்திடம் நயன்தாரா நேரடியாக பேசியும் விக்னேஷ் சிவனை நீக்குவதில் அஜித்தும், லைகாவும் தயாராக இருந்ததாக கூறப்பட்டது. இந்தச் சூழலில் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்திருந்த அஜித்தின் புகைப்படத்தையும், ஏகே 62 என்ற வார்த்தையையும் நீக்கி மோட்டிவேஷ்னல் வாசகத்தை வைத்தார். இதன் மூலம் ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியது உறுதியானது.

ஏகே 62க்காக படையெடுத்த இயக்குநர்கள்
விக்னேஷ் சிவன் விலகியதை அடுத்து ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் எனவும், கதையை சர்தார் படத்தின் இயக்குநர் மித்ரன் தயார் செய்வார் எனவும் பேசப்பட்டது. ஆனால் மகிழ் திருமேனிக்கு அஜித் 4 மாதங்களுக்குள் படத்தை முடிக்க வேண்டுமென கட்டளையிட்டதாகவும் இதனால் மகிழ்ச்சி இழந்த மகிழ் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும் லேட்டஸ்ட் தகவல் பரவிவருகிறது.

நாளை வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
அஜித் படத்தை அடுத்ததாக யார் இயக்கவிருக்கிறார் என்பது பெரும் புதிராகவே இருக்கிறது. மகிழ் திருமேனியும் வெளியேறும்பட்சத்தில் அஜித்தை வெங்கட்பிரபுவோ, விஷ்ணுவர்தனோ இயக்குவார்கள் என கோடம்பாக்கத்தில் புதிய பேச்சு எழுந்திருக்கிறது. இருப்பினும் எதுவுமே அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பதால் ரசிகர்கள் பெரும் குழப்பமடைந்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித்தின் 62ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே நாளையுடன் ஏகே 62 குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா என ஏகே ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











