அப்பாவும், அம்மாவும் விவாகரத்து செய்தப்போ எப்படி இருந்துச்சு தெரியுமா?.. கமல் மகள் உருக்கம்
சென்னை: இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் கமல் ஹாசன். அவரது நடிப்பில் கடைசியாக கல்கி, இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இவற்றில் கல்கியில் நெகட்டிவ் ரோலிலும், இந்தியன் 2வில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். ஆனால் இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை. சூழல் இப்படி இருக்க கமல் ஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கமல் ஹாசன் என்ற பெயரை தவிர்த்துவிட்டு தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவை எழுத முடியாது. சிறு வயது முதலே நடித்துவரும் அவர் இதுவரை 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்த இந்தியன் 2 சில நாட்களுக்கு முன்புதான் வெளியானது. அந்தப் படம் மோசமான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார் கமல்.

கமலின் பர்சனல் வாழ்க்கை: கமலைப் பொறுத்தவரை அவரது பர்சனல் வாழ்க்கை பலமுறை சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. முதலில் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்ட அவர் பிறகு சரிகாவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன். இருவருமே சினிமாவில் இருக்கிறார்கள். சரிகாவை பிரிந்த கமல் அதன் பின் கௌதமியுடன் வாழ்ந்தார். அந்த லிவிங் டூ கெதர் வாழ்க்கையும் பாதியில் முடிந்தது. சூழல் இப்படி இருக்க கமலும், சரிகாவும் பிரிந்தது குறித்து அக்ஷரா ஹாசன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அக்ஷரா ஹாசன் பேட்டி: அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "நாங்கள் பிரபலமானவர்களின் குழந்தைகளாக இருந்தாலும் நாங்களும் மனிதர்கள்தான். நாங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். எனது அம்மாவும், அப்பாவும் அன்பானவர்கள். எங்களுக்குள்தான் பிரச்னைகள் இருக்கின்றன. இதில் நீங்கள் எப்போதும் உனது அப்பா, அம்மாவோடு இருப்பீர்கள் என்றுதான் எங்களிடம் சொன்னார்கள். அதுமாதிரி வாழ்க்கையில் சில நேரங்களில் நடக்கும்.
மனம் கலங்கியது: அதை கேட்டு எனது மனம் கலங்கியது. எந்த குழந்தையாக இருந்தாலும் அது ஒரு பிரச்னைதான். ஆனால் நானும், எனது அக்காவும் அதிர்ஷ்டசாலிகள். எங்களை அப்பாவும், அம்மாவும் புரிந்துகொண்டவர்களாக இருந்தார்கள். நாங்கள் பெற்றோரைவிட்டு பிரியவில்லை. அதுதான் முக்கியமான விஷயம். அதுதான் எங்களது வாழ்க்கையை எளிதான ஒன்றாக மாற்றியது.
ஸ்ருதி ஹாசனிடம் உதவி: நான் எனது அக்கா ஸ்ருதியிடம் பலமுறை உதவி கேட்டிருக்கிறேன். நான் பல விஷயங்களை எளிமையாக சமாளிப்பதற்கு அக்காதான் காரணம். பள்ளியில் என்னை கேலி செய்யும்போதெல்லாம் அக்காவிடம் சென்று, அவர்கள் என்னை ரொம்ப கேலி செய்கிறார்கள். அவர்களை நான் அடிக்க விரும்புகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.
நான் அடிக்கிறேன்: ஆனால் அக்காவோ என்னிடம் வன்முறை நல்லது இல்லை என்று சொல்வார். மேலும் யாராவது உன்னை கேலி, கிண்டல் செய்தால் நேராக வந்து என்னிடம் சொல். நான் போய் சண்டை போடுகிறேன் என்பார். எப்போது அந்தப் பிணைப்பு எங்களுக்குள் உண்டு. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பாதுகாத்துவருகிறோம். அவர் என்னிடம் வந்து சில சமயம் ஒரு விஷயம் குறித்து கருத்து கேட்பார். நானும் எனது கருத்தை சொல்வேன். அந்த நெருக்கம் எங்களுக்குள் உண்டு""என்றார்.


Click it and Unblock the Notifications











