ரஜினிக்கு அனைத்தும் தெரியும்.. பா.இரஞ்சித் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும்.. பிரபலம் ஓபன் டாக்
சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து கபாலி, காலா ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் பா.இரஞ்சித். தலித் அரசியல் பேசும் பா.இரஞ்சித் ரஜினியை வைத்து அந்தப் படங்களை இயக்கியது பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டடித்தன. இந்தச் சூழலில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது ரஜினியின் தலித்திய புரிதல் பற்றிய கேள்விக்கு பா.இரஞ்சித் சிரித்து கடந்து சென்றார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி அதிரடி கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
பா.இரஞ்சித் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். இதுவரை 5க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் அவர் தங்கலான் படத்தை இப்போது எடுத்திருக்கிறார். படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க வானம் கலை திருவிழாவில் அவரிடம் ரஜினிகாந்த்தின் தலித்திய புரிதல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவரோ பதில் எதுவும் கூறாமல் சிரித்துவிட்டு கடந்து சென்றார். அதனையடுத்து பா.இரஞ்சித்தை ரஜினி ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கினர்.

பிரபலம் கருத்து: இந்த விஷயம் சர்ச்சை ஆனதைத் தொடர்ந்து விளக்கமளித்த பா.இரஞ்சித், 'சும்மா சிரித்ததற்கே பல பல அர்த்தங்களை சொல்கிறார்கள் என்றால் நமது சிரிப்பு அந்த அளவுக்கு ஃபவர்ஃபுல்லாக இருக்கிறது' என்று கூறியிருந்தார். இந்த நிலையில் திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி இந்த விவகாரம் குறித்து பேசுகையில், "பா.இரஞ்சித்தின் முதல் படம் வித்தியாசமான தலித் அரசியலை பேசிய படம். இரண்டாவது படம் மெட்ராஸில் சென்னையின் அடித்தட்டு மக்கள் மன ஓட்டத்தை அழகாக காட்டியிருந்தார்.
கபாலி: கபாலி திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. பா.இரஞ்சித் என்றால் யார் என எல்லோருக்கும் தெரிய வைத்தது. ஆனால் காலா திரைப்படம் போதிய வெற்றியை பெறவில்லை. அதேநேரம் சார்பட்டா பரம்பரைக்கும், வரவிருக்கும் தங்கலான் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவரது படம் என்றாலே ஒரு சமூகம் சார்ந்த கதையாகத்தன் இருக்கிறது. ரஜினி விஷயத்தில் பா.இரஞ்சித் நன்றி கெட்டவர் என்று சொல்கிறார்கள். ரஜினிதான் கபாலி படத்தை கொடுத்து இரஞ்சித்தை இன்னும் வெளியே தெரிய வைத்தார்.
ஏற்கனவே பழக்கம்: பா.இரஞ்சித்தும், ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவும் ஏற்கனவே பழக்கமானவர்கள். சௌந்தர்யாதான் இரஞ்சித்துக்கு கபாலி பட வாய்ப்பை பெற்றுக்கொடுத்தார். ஆனால் சௌந்தர்யாவுக்காக மட்டும் ரஜினி இரஞ்சித்துக்கு வாய்ப்பு கொடுத்திருப்பாரா என்று யோசிக்க வேண்டும். ஏனெனில் 80களிலேயே பாரதிராஜா, மகேந்திரன் ஆகியோரது படங்களில் ரஜினி நடித்திருக்கிறார். 90களுக்கு பிறகு மசாலா படங்களில் நடித்த அவர் வெற்றிமாறனுக்கோ, மிஷ்கினுக்கோ வாய்ப்பு கொடுக்கவில்லை.
ஏன் பா.இரஞ்சித் தேர்வு: சூழல் இப்படி இருக்க ஏன் பா.இரஞ்சித்தை தேர்வு செய்தார். ஏனென்றால் அந்த நேரத்தில் ரஜினிக்கு லைம் லைட்டில் இருக்கும் புது இயக்குநர் தேவைப்பட்டார். அதேசமயம் அரசியல் சார்ந்து சிந்தித்துதான் இந்த முடிவை அவர் எடுத்தார். இதுபோன்ற படங்களில் நடித்தால் அரசியலில் அடித்தட்டு மக்களிடம் போய் சேரலாம். ரஜினிக்கு தலித் அரசியல் தெரியாதா என்றால் கண்டிப்பாக தெரியும். அப்படி பார்த்தால் பா.இரஞ்சித் இதற்கு மறுப்போ, வருத்தமோ தெரிவித்திருக்க வேண்டும். இப்போதுகூட அவர் மறுப்போ, வருத்தமோ தெரிவிக்கலாம்" என்றார்.


Click it and Unblock the Notifications











