சமந்தாவின் ’ஊ சொல்றியா மாமா’ பாடலை பாடிய ஆலியா பட்.. வீடியோவுல புள்ள எக்ஸ்பிரஷன பாக்கனுமே!
ஹைதராபாத்: பாலிவுட் கதாநாயகி ஆலியாபட் நடித்துள்ள படம் ஜிக்ரா. இந்தப் படம் வரும் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்டுள்ளதால், படத்தினை தென்னிந்தியாவிலும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவின் மார்க்கெட் பெரியது என்பதால், அங்கு ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ஜிக்ரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நேற்று அதாவது அக்டோபர் 8ஆம் தேதி ஹைதராபாத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதேபோல் நடிகர் ராணா டகுபதியும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆலியா பட், ஊ சொல்றியா மாமா பாடலைப் பாடினார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

வாசன் பாலா இயக்கத்தில் ஆலியா பட் மற்றும் வேதாங் ரெய்னா நடித்துள்ள ஜிக்ரா திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை அதாவது அக்டோபர் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படியான நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை சமந்தாவும் நடிகர் ராணா டகுபதியும் கலந்து கொண்டு அசத்தினர். சமந்தா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக, ஆலியா பட் பேசியதும், ஆலியா பட் தொடர்பாக சமந்தா பேசியதும், புஷ்பா படத்தில் இடம் பெற்றுள்ள ஊ சொல்றியா மாமா பாடலின் தெலுங்கு வெர்ஷனைப் பாடியது என அனைத்தும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

பொறாமை: இந்த விழாவில் கலந்து கொண்ட ஆலியா பட் சமந்தா குறித்து பேசியது மிகவும் கவனம் பெறும் விஷயமாக மாறியுள்ளது. அதாவது, " பொதுவாக நடிகைகள் கொஞ்சம் பொறாமையாக இருப்பதாக கூறுவார்கள். ஆனால் சமந்தா அவ்வாறு இல்லாமல், எனது படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். ஒரு பான் இந்தியா சூப்பர் ஸ்டார் எனது படத்திற்கு ஆதரவாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு நான் என்றைக்கும் நன்றி உள்ளவளாக இருப்பேன். இந்த நிகழ்ச்சிக்காக சமந்தாவை தொடர்புகொண்டு நான் பேசியபோது, வெறும் 6.5 நொடிகளில் வருவதாக உத்தரவாதம் அளித்தார். அது எனக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

ஆணாதிக்க சமூகம்: எனது அன்பிற்குரிய சமந்தா. திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் ஹீரோதான். உங்களது திறமை, உங்களது வலிமை, ஒரு படத்திற்காக உங்களது உடலை நீங்கள் வருத்திக் கொள்வதைப் பார்க்கும்போது எனக்கு உத்வேகமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. ஒரு பெண்ணாக இருப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். அதிலும் இந்த ஆண்களின் ஆதிக்கம் இருக்கக்கூடிய சமூகத்தில் வெற்றிகரமான பெண்ணாக வாழ்வது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது.

முன்மாதிரி: சமந்தா நீங்கள் உங்களது சொந்தக் காலில் நிற்கின்றீர்கள். அதனால்தான் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகின்றீர்கள். இதுமட்டும் இல்லாமல் நீங்கள் உங்கள் கால்கள் மூலம் கொடுக்கும் ஒவ்வொரு உதையும் மிகவுமே முக்கியமானது.
அது பலருக்கு முன்மாதிரியாக எப்போது இருக்கவேண்டும் என ஆசைப்படுகின்றேன். சமந்தாவுடன் தான் இணைந்து பணியாற்ற ஆசைப்படுக்கின்றேன். இயக்குநர் த்ரிவிக்ரம் சார் நீங்கள் எங்களுக்கான கதையை உருவாக்குங்கள். நான் இதனை மேடைக்காக சொல்லவில்லை" எனக் கூறினார்.

ஊ சொல்றியா மாமா: மேலும் இந்த நிகழ்வில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்றுள்ள ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா நடனமாடியிருந்தார். இந்தப் பாடல் ஆடியோவாகவும் வீடியோவாகவும் பெரும் வெற்றி பெற்றது. அதற்கு பாடலின் இசை, வரிகள் மற்றும் நடன அசைவுகள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கும்படியாக இருந்தது.

இப்படியான நிலையில், ஜிக்ரா படத்தின் ப்ரீ - ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை ஆலியா பட் ஊ சொல்றியா மாமா பாடலின் தெலுங்கு வெர்ஷனைப் பாடினார். அப்போது சமந்தா மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் மூழ்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











