இயக்குநர் சரண் மீதான வழக்குகள் வாபஸ்!
இயக்குநர் சரண் மீது தொடரப்பட்ட செக் மோசடி உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக ஒப்புக் கொண்டார் ஞானசேகரன்.
இயக்குனரும் தயாரிப்பாளருமான சரண் தற்போது ‘ஆயிரத்தில் இருவர்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது சிவகாசி சபையர் லித்தோ பிரஸின் உரிமையாளரான ஞானசேகரன் கொடுத்த புகாரின் பேரில் சரண் கைது செய்யப்பட்டார்.
இதற்கு தமிழ் திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கூட்டமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, பொருளாளர் ராதா கிருஷ்ணன், தமிழ் திரைப்பட இயக்குனர் சார்பில் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தலைவர் சரத்குமார், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தலைவர் ஜி.சிவா, செயலாளர் கே.ஆர்.செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் இயக்குனர் சரண் மற்றும் சிவகாசி சபையர் லித்தோ பிரஸின் உரிமையாளரான ஞானசேகரனும் கலந்துகொண்டனர்.
முறையற்றது
இயக்குனர் சரண் படப்பிடிப்பின் போது கைது செய்யப்பட்ட விதம் தவறு என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஞானசேகரன் சரணிடம் பாக்கி பணத்தை வாங்குவதுதான் நோக்கம் என்றாலும் அவரை கைது செய்த விதம் முறையற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மன்னிப்பு கேட்டார்
இந்த நிகழ்வால் சரண் மன உளைச்சலுக்கு ஆளானதை உணர்ந்து ஞானசேகரன் மன்னிப்பு கேட்டார். மேலும் சரண் மீது நீதிமன்றத்தில் கொடுத்திருக்கும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவும் அவர் உறுதியளித்தார். அத்துடன் அவர் இன்னும் சில தயாரிப்பாளர்கள் தரவேண்டிய பாக்கியை நான் கணக்கு போட்டு விவரங்களை தயாரிப்பாளர் சங்கத்தில் தெரிவிக்கிறேன் என்றும், சங்க நிர்வாகிகள் என்னையும் தயாரிப்பாளர்களையும் அழைத்து அவர்களிடம் பேசி, பணத்தை வசூல் செய்து தரும்படியும் கேட்டுக் கொண்டார். இவருடைய கோரிக்கைக்கு சங்கம் முழு ஒத்துழைப்பு தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியஸ்தம்
மேலும் தயாரிப்பாளர்கள் போஸ்டர்கள் அச்சடிக்கும் போதும் பணத்தொகைக்கான பில்போடும் போதும் தயாரிப்பாளர்கள் கம்பெனியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அந்த ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் பிரச்சினை ஏற்படும் சமயத்தில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி அனைத்து தீர்மானங்களையும், கூட்டமைப்பினர் முன்னிலையில் இயக்குனர் சரண், ஞானசேகரன் ஆகியோர் முழுமனதுடன் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டனர்.


Click it and Unblock the Notifications











