புல்வாமா எதிரொலி: இந்திய படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை
மும்பை: புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய படங்களில் நடிக்க பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சி.ஆர். பி. எஃப். வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து இந்திய படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர்கள், நடிகைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் இந்தி படங்களில் நடிக்க பாகிஸ்தானை சேர்ந்த நடிகர்கள், நடிகைகளுக்கு தடை விதித்து அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இதையும் தாண்டி பாகிஸ்தான் கலைஞர்களுடன் பணியாற்ற விரும்பும் நிறுவனங்களுக்கும் தடை விதித்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த பாடகர்கள் பாடிய பாடல்களை கைவிடுமாறும், அவர்களுடன் சேர்ந்து இனி பணியாற்றக் கூடாது என்றும் மகராஷ்டிரா நவநிர்மன் சேனா இசை நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே தான் நடித்துள்ள டோட்டல் தமால் படம் பாகிஸ்தானில் வெளியிடப்படாது என்று அஜய் தேவ்கன் அறிவித்துள்ளார். மேலும் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு டோட்டல் தமால் குழு சார்பில் ரூ. 50 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











