நூறு நாளாச்சு..அங்கலாம் திறந்துட்டாங்க, இங்கயும் அனுமதிங்க.. தியேட்டர்களை திறக்க அரசுக்கு கோரிக்கை!
சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
Recommended Video
உயிர்கொள்ளி வைரஸான கொரோனா உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.11 கோடியாக அதிகரித்துள்ளது. இநதியாவிலும் கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வருகிறது.

சினிமா தியேட்டர்கள்
இதன் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள் கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மற்ற நிறுவனங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியதை போல, சினிமா தியேட்டர்களையும் திறக்க அனுமதியளிக்க வேண்டும் என்று இந்திய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது

நலிவடைந்து விட்டது
இதுபற்றி அந்தச் சங்கம் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது: உள்ளூர் போக்குவரத்து, கடைகள், மால்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை நிபந்தனைகளுடன் திறக்க அனுமதித்துள்ள மத்திய அரசு தியேட்டர்களை திறப்பது பற்றி எதுவும் சொல்லாமல் அமைதி காப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. கடந்த 100 நாட்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு தொழிலே நலிவடைந்து விட்டது.

முதுகெலும்பு
இதன் காரணமாக 2 லட்சத்துக்கும் அதிகமான நேரடி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பல கோடி ரூபாய் முடங்கியுள்ளது. இந்திய சினிமா துறையில், 60 சதவிகித வருவாயை பெற்று தரும் முதுகெலும்பு நாங்கள்தான். இந்த லாக்டவுன் காரணமாக, பொழுதுபோக்குத் துறை மொத்தமாக ஸ்தம்பித்துள்ளது. அதனால் அதிக பாதிப்பில்லாத பகுதிகளில், சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி அனுமதிக்க வேண்டும்.

அனுமதிக்க வேண்டும்
இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், நெதர்லாந்து, ஆஸ்ட்ரியா, மலேசியா உள்பட பல நாடுகளில் தியேட்டர்கள் மிகுந்த பாதுகாப்புகளுடன் திறக்கப்பட்டுள்ளன. அதுபோல நம் நாட்டிலும் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்க வேண்டும். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ரசிகர்களை நாங்கள் தியேட்டர்களில் அனுமதிப்போம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அக்ஷய்குமார்
கடந்த சில நாட்களாக திரைப்படங்களை ஒ.டி.டி தளத்தில் நேரடியாக தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்து வருகின்றனர். தமிழில் பொன்மகள் வந்தாள், பெண்குயின் உட்பட சில படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. இன்னும் சில படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இந்தியில் முன்னணி நடிகர்களான அக்ஷய்குமார், அபிஷேக்பச்சன் உள்ளிட்டவர்களின் படங்களும் ஓடிடியில் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











