Allu Arjun: ஹிந்தியைவிட தமிழ்தான் சூப்பர்.. அல்லு அர்ஜுன் ஓபன்.. என்ன சொல்லி இருக்காரு பாருங்க!
சென்னை: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் , ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து, கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி பிரமாண்டமான வெற்றியைப் பெற்றதால் படம் பான் இந்தியா ஹிட் படமாக மாறியது. முதல் படத்தின் முடிவிலேயே இரண்டாவது படத்துக்கான லீட் கொடுக்கப்பட்டதால், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படத்தின் நடிகர் அல்லு அர்ஜுன் பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
புஷ்பா படத்தின் இயக்குநர் சுகுமாறனுக்கும் நாயகன் அல்லு அர்ஜுனுக்கும் இடையில் சில மோதல்கள் ஏற்பட்டதால் படத்தினை முழுமையாக எடுப்பதில் படக்குழுவுக்கு இடையில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இருவரும் ஆளுக்கு ஓரு நாட்டிற்கு சுற்றுலா சென்றுவிட்டனர். ஒரு கட்டத்தில் படம் முழுமையாக எடுக்கப்படுமா? படம் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் இடையிலான பிரச்னை முடிவுக்கு வர, படத்தின் பணிகள் நிறைவடைந்து ரிலீஸ்க்கு தயாரானது. முதலில் படம் டிசம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் படம் டிசம்பர் 5ஆம் தேதியே ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு காராணம், டிசம்பர் 6ஆம் தேதி இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான தினம். அதாவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய பாபாப்சாகேப் அம்பேத்கரின் நினைவு நாள், பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதாலும் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியதாக கூறப்படுகின்றது.

புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் வந்து கொண்டே இருந்ததால் படம் தியேட்டரிலேயே கிட்டத்தட்ட 350 கோடிக்கு மேல் வசூல் செய்தது. படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா மிகவும் கவர்ச்சியான ஆட்டம் போட்டதால், அந்த பாடலைப் பார்க்கவும் ரசிகர்கள் தியேட்டரில் அலைமோதினர். தியேட்டர் வசூல் மட்டும் இல்லாமல் ஓடிடி பிஸ்னஸ் என படம் நல்ல லாபம் பார்த்தது.
ட்ரைலர்: புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தினைப் பொறுத்தவரையில், படத்தினை மாபெரும் இந்திய சினிமாவாக மாற்ற படக்குழு திட்டமிட்டுள்ளதால், படத்திற்கான புரோமோசன் சிறப்பாகவே செய்து வருகின்றனர். புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜுன் ரூபாய் 300 கோடிகள் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகின்றது. மேலும் படத்தில் நடிகை ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் என தகவல் வெளியானதைப்போல், ட்ரைலரிலும் ஸ்ரீலீலாவின் நடனக் காட்சிகள் இடம் பெற்றது.
வரவேற்பு: ட்ரைலரைப் பொறுத்தவரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் பாட்னாவில் ரசிகர்கள் முன்னிலையில் ட்ரைலர் ரிலீஸ் செய்யப்பட்டதால், படக்குழுவினரைக் காண ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கில் குவிந்தனர். ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தமிழ்: இந்நிலையில், படத்தின் ட்ரைலர் குறித்து படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் தெரிவித்த கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, “ எனக்கு தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளுமே தெரியும். நான் எனது படங்களில் ட்ரைலர் வெளியாகும்போது அவற்றை அனைத்து மொழிகளிலும் பார்ப்பேன். குறிப்பாக தெலுங்கில் இருப்பதைப்போல் சிறப்பாக டப் செய்துள்ளார்களா எனப் பார்ப்பேன். அந்த வகையில், ஹிந்தி வெர்ஷனை விட தமிழ் வெர்ஷன் டப்பிங் தான் சிறப்பாக உள்ளது. தெலுங்கில் இருக்கும் சில நுணுக்கமான விஷயங்கள்கூட தமிழ் வெர்ஷனில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











