அல்லு அர்ஜுன் கைது.. கலங்கி நின்ற மனைவி.. காவல் நிலையத்தில் சூழ்ந்துக் கொண்டு கதறும் ரசிகர்கள்!
சென்னை: ஸ்டார் நடிகர்கள் பொதுவெளியில் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி வெளியே வந்தால் எத்தகைய விளைவுகள் நடைபெறும் என்பதற்கு அல்லு அர்ஜுன் சம்பவம் மிகப்பெரிய உதாரணமாக மாறியுள்ளது. புஷ்பா 2 படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியானது. அதற்கு முதல் நாள் இரவில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் நேரடியாக ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த நிலையில், அவரை காண கூட்டம் முண்டியடித்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ரேவதி எனும் பெண் பரிதாபமாக பலியானார். அவரது குழந்தையும் மூர்ச்சையடைந்து சிகிச்சை பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரேவதியின் குடும்பத்துக்கு நடிகர் அல்லு அர்ஜுன் 25 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது உயிரிழப்புக்கு அல்லு அர்ஜுன் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி தியேட்டருக்கு வந்ததும் போதிய போலீஸார் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்பதுமாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை அல்லு அர்ஜுனை அவரது வீட்டில் அதிகாலையிலேயே போலீஸார் அதிரடியாக கைது செய்தது ரசிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
புஷ்பா படத்தில் போலீஸ் ஸ்டேஷன் சீன்: புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனின் ஆட்களை போலீஸார் கைது செய்து அடித்ததை பார்த்து கடுப்பாகும் புஷ்பா அனைத்து போலீஸாருக்கும் பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கி ரிலீஸ் செய்வது போல காட்சி அமைந்திருக்கும். புஷ்பா 2 திரைபடம் 1000 கோடி ரூபாய் வசூலை அதிரடியாக கடந்த நிலையில், சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் அல்லு அர்ஜுன் கைது காரணமாக அதிர்ச்சியாகி உள்ளனர்.
கலங்கிய மனைவி: காலையிலேயே கைது செய்ய வந்த போலீஸாரிடம் எங்கேயும் ஓடிவிட மாட்டேன் என சொல்லிவிட்டு பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு, காபி சாப்பிட்டுவிட்டு கூலாக அல்லு அர்ஜுன் போலீஸ் வாகனத்தில் ஏறி காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். அவர் கிளம்புவதற்கு முன்னதாக அவரது மனைவி சினேகா ரெட்டி கலங்கிய முகத்துடன் அவரை காண கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன் என விடை பெற்றுச் சென்ற காட்சிகள் ரசிகர்களை மேலும், கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
காவல் நிலையத்தை சூழ்ந்துக் கொண்ட ரசிகர்கள்: சிக்கடபள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுனை கைது செய்து வைத்துள்ள நிலையில், அந்த காவல்நிலையத்தை தற்போது அல்லு அர்ஜுன் ரசிகர்கள் பெருமளவில் சூழ்ந்துக் கொண்டனர். தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்த நிலையிலேயே கூட்ட நெரிசலில் ஒரு உயிர் பிரிந்து விட்டது. காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுனை காண ரசிகர்கள் கூட்டம் கூடினால் என்ன விபரீதம் நடக்குமோ என்கிற அச்சமும் எழுந்துள்ளது. அல்லு அர்ஜுன் சட்ட ரீதியாக அவரது பிரச்சனையை சமாளித்துவிட்டு வெளியே வருவார் என்றும் ரசிகர்கள் மேலும், பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











