Allu Arjun: வைராக்கியம்தான்.. ஜெயில் உணவுக்கு நோ.. தரையில் படுத்த அல்லு அர்ஜுன்.. என்ன நடந்தது?
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று அதாவது டிசம்பர் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். புஷ்பா 2 படம் ரிலீஸின் போது ப்ரீமியர் ஷோ ஹைதராபாத்தில் திரையிடப்பட்டது. அப்போது ரசிகர்களுடன் படம் பார்க்க அல்லு அர்ஜுன் வந்ததால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் ரேவதி என்ற ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மேலும் அவரது மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்படியான நிலையில், இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று இரவு முழுவதும் சிறையில் இருந்த அல்லு அர்ஜுன், சிறையில் என்ன செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆகி வசூலில் சக்கை போடு போட்டுவருகின்றது. இதுவரை உலகம் முழுவதும் படம் ரூபாய் 1100 கோடிகளுக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் மட்டும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் 6 நாளில் ரூபாய் 1002 கோடிகளை வசூல் செய்த படமாக புஷ்பா 2 சாதனை படைத்தது. ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை உயிரிழந்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நேற்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.

மாவட்ட நீதிமன்றம் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்க, தெலங்கான உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் நீதிமன்றத்தில் ஜாமீன் தொடர்பான ஆவணங்கள் தயாராவதில் காலதாமதம் ஏற்பட்டதால், அல்லு அர்ஜுன் நேற்று முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. மேலும், இன்று காலை அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கியது.
கைதி எண்: இந்நிலையில் இன்று அதாவது, டிசம்பர் 14ஆம் தேதி அல்லு அர்ஜுன் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அல்லு அர்ஜுன், நேற்று இரவில் சஞ்சல்குடா சிறையில் என்ன செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிறையில் உள்ள கைதிகள் பதிவேட்டில், அல்லு அர்ஜுனுக்கு கைதி எண் 7697 என்ற எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாப்பாடு: மேலும் இரவில் அவருக்கு சாப்பிட சிறையில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது. ஆனால், அவர் அந்த உணவை மறுத்துவிட்டார். மேலும் இரவு முழுவதும் அவர் சாப்பிடவே இல்லை. அதேநேரத்தில், சிறையில் அவருக்கு ஏ-1 ரக சிறை தயார் செய்யப்பட்டது. ஆனாலும், சிறையில் அவருக்கு இருந்த படுக்கையில் படுக்காமல், அல்லு அர்ஜுன் தரையிலேயே படுத்துள்ளார். இந்தத் தகவல்கள் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது.

மகிழ்ச்சி: அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு, தெலுங்கு திரையுலகம் மட்டும் இல்லாமல், இந்திய திரையுலகில் இருந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக அரசியல் தலைவர்களும் அல்லு அர்ஜுன் கைது குறித்து விமர்சனங்களை முன் வைத்தனர். ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இப்படியான நிலையில் அல்லு அர்ஜுன் ஜாமீனில் வெளியே வந்துள்ளது, அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



Click it and Unblock the Notifications











