அல்லு அர்ஜுன் எந்த தவறும் செய்யல.. வழக்கை வாபஸ் வாங்க தயார்.. மனைவியை இழந்த கணவர் அறிவிப்பு!
ஹைதராபாத்: டிசம்பர் 4ம் தேதி இரவு நேரத்தில் மகன் அடம்பிடித்த காரணத்தால் குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்றது நான் செய்த தவறுதான். என்னுடைய மனைவி அப்படி பரிதாபமாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பாள் என கனவிலும் நினைக்கவில்லை. ஆனால், என் மனைவியின் இறப்புக்கும் அல்லு அர்ஜுனுக்கும் எந்தவொரு சம்மந்தமும் கிடையாது. உண்மையில் அவர் எந்தவொரு தவறையும் செய்யவில்லை என மறைந்த ரேவதியின் கணவர் பாஸ்கர் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் நடிகர் அல்லு அர்ஜுன் வரப்போகிறார் போதிய போலீஸ் பந்தோபஸ்த் கொடுங்க என தியேட்டர் நிர்வாகம் டிசம்பர் 2ம் தேதியே கோரிக்கை வைத்ததாகவும் போலீஸார் காட்டிய அலட்சியத்தால் தான் ரேவதியின் உயிர் பிரிந்ததாகவும் அதிரடியாக அல்லு அர்ஜுனை எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி இந்த வழக்கில் கைது செய்ய காரணமே ரேவந்த் ரெட்டியின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தான் என எதிர்கட்சியினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அல்லு அர்ஜுனுக்கு எதிராக தான் கொடுத்த வழக்கையே வாபஸ் வாங்குவதாக பாஸ்கர் அறிவித்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
மனைவியை இழந்த பாஸ்கர்: சினிமா மோகம் ரசிகர்களை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதற்கு மறைந்த ரேவதியின் கணவர் பாஸ்கர் தான் சாட்சியாக உள்ளார். ஒரு படத்தை முதல் நாளே அதுவும் படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக இரவில் ப்ரீமியர் காட்சி வெளியிட்டால் அதையும் அதிக பணம் கொடுத்து பார்க்கவும், நடிகர்களை பார்க்கவும் ஒரு கூட்டமே அலைகிறது. 6 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை எல்லாம் நடிகர்களால் இப்படிப்பட்ட ரசிகர்களின் கூட்டத்தால் தான் செய்ய முடிகிறது. மனைவி ரேவதியையும் தனது மகன் மற்றும் மகளை அழைத்துக் கொண்டு சந்தியா 70 எம் எம் தியேட்டருக்கு டிசம்பர் 4ம் தேதி சென்ற பாஸ்கர் தனது மனைவியை இழந்துவிட்டார். மகனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறுகின்றனர்.

அல்லு அர்ஜுன் கைது: மனைவியை இழந்த மன வேதனையில், இதற்கு சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என காவல் நிலையத்தில் பாஸ்கர் புகார் அளித்தார். அந்த வழக்கை பதிவு செய்த போலீஸார் சந்தியா தியேட்டர் ஓனரையும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஊழியரையும் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில், இன்று அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். அவருக்கு ஜாமின் வழங்கமுடியாது என குற்றவியல் நீதிமன்றம் அறிவித்த நிலையில், அல்லு அர்ஜுன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அல்லு அர்ஜுன் மீது தவறு கிடையாது: ரேவதி உயிரிழந்ததை அறிந்து வருத்தம் தெரிவித்த புஷ்பா 2 நடிகர் அல்லு அர்ஜுன் வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் பின்னர், அந்த குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியையும் வழங்கினார். ஆனால், அதை தாண்டி இன்று அவரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், அதுகுறித்து அறிந்த பாஸ்கர் அல்லு அர்ஜுன் என் மனைவியின் இறப்புக்கு காரணம் இல்லை என்றும் தான் அந்த வழக்கை வாபஸ் வாங்க தயாராக இருப்பதாக பாஸ்கர் கூறியுள்ளதாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. வழக்கு வாபஸ் பெரும் பட்சத்தில் வரும் திங்கட்கிழமை மீண்டும் நடைபெறும் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு அல்லு அர்ஜுன் விடுவிக்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











