Pushpa 2: இன்னும் 50 நாட்களில் சம்பவம் செய்யப்போகும் புஷ்பா 2..வெறித்தனமான போஸ்டரால் அலறும் டோலிவுட்
ஹைதராபாத்: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். இவருடன் ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். புஷ்ப படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. முதல் படத்தின் முடிவிலேயே இரண்டாவது படத்துக்கான லீட் கொடுக்கப்பட்டது.
இதனால் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தனர். இந்நிலையில் படம் வரும் டிசம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு ஏற்கனவே தெரிவித்த நிலையில் தற்போது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இதுமட்டும் இல்லாமல், ரசிகர்களை குஷிப்படுத்தும் தகவலையும் அத்துடன் இணைத்துள்ளது.
புஷ்பா படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் வந்து கொண்டே இருந்ததால் படம் தியேட்டரிலேயே கிட்டத்தட்ட 350 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இது இல்லாமால் ஓடிடி பிஸ்னஸ் என படம் சக்கை லாபம் பார்த்தது. இந்தியா முழுவதுமே இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்தியா மட்டுமில்லாமல் புஷ்பா படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த படத்தின் பாடலுக்கு தனது குடும்பத்துடன் ரீல்ஸ் செய்து வெளியிட்டு இருந்தார். ஐசிசி உலக கோப்பை போட்டிகளில் வார்னர் விளையாடும் போதும் ஐபிஎல் போட்டிகளில் வார்னர் விளையாடும் போதும் புஷ்பா படத்தின் பாடல்களை மைதானத்தில் ஒலிக்க விட்டு அவர் நடனம் ஆடுவதை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். இந்த வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது. இது மட்டுமில்லாமல் புஷ்பா படம் குறித்து ஏதாவது அப்டேட் வந்தால் கூட வார்னர் அந்த அப்டேட் தொடர்பான விஷயங்களில் ஈடுபட தொடங்கினார். இப்படி புஷ்பாவிற்கு உலகளாவிய ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

சந்தேகம்: படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுனுக்கும் இடையில் சில பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் அதனால் இருவருமே பேசிக்கொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்பட்டது. அல்லு அர்ஜுன் புஷ்பா படத்திற்கான ஹேர் ஸ்டைலை முற்றிலுமாக மாற்றியதால், புஷ்பா 2 வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
பிரச்னை: இப்படியான நிலையில் இயக்குநர் மற்றும் நடிகருக்கும் இடையில் இருந்த பிரச்னை ஓரளவுகு சரிசெய்யப்பட்டதால் படப்பிடிப்பு முழுமையாக முடிந்தது. தற்போது படத்தின் டப்பிங் பணிகளும் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றது. படத்தினை வரும் டிசம்பர் 6ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஏற்கனவே படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

50 நாட்கள்: இந்நிலையில் இன்று அதாவது அக்டோபர் 17ஆம் தேதி படக்குழு வெளியிட்டுள்ள படத்தின் புது போஸ்டரில் புஷ்பாவின் ஆட்சி இன்னும் 50 நாளில் தொடங்கவுள்ளது என தெரிவித்துள்ளது. அதாவது புஷ்பா 2 படம் இன்னும் 50 நாட்களில் ரிலீஸ் ஆகவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கண்டனம்: புஷ்பா திரைப்படத்தில் கதாநாயகனாக வரும் அல்லு அர்ஜுன் செம்மரங்களை வெட்டி கடத்தும் ஒரு கடத்தல்காரர் ஆக வருகிறார். இந்த படம் இந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற்ற படமானதால் வனத்துறை அதிகாரிகள் சிலர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதாவது செம்மரங்களை கடத்துபவர்களை நாங்கள் எங்கள் உயிரை பணயம் வைத்து பிடிக்கின்றோம். செம்மர கடத்தல் காரர்களை பிடிக்கும் முயற்சியில் பல காவல்துறை அதிகாரிகள் தங்களது உயிரையும் தியாகம் செய்துள்ளனர். இப்படி இருக்கையில் ஒரு கடத்தல்காரனை ஹீரோ போல் சித்தரிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று புஷ்பா படத்திற்கு எதிராக தங்களது கண்டனத்தையும் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











