Pushpa 2 Cheyyaru Balu Review: இறங்கி அடிச்சு இருக்காங்க.. புஷ்பா 2க்கு செய்யாறு பாலு விமர்சனம்!
சென்னை: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் புஷ்பா 2. இந்தப் படத்தினை சுகுமாறன் இயக்கியுள்ளார். படத்தினை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை படத்தினை பெரும்பாலும் பாராட்டி வருகின்றனர். படத்தினை தமிழ்நாட்டில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. படம் சுமார் 800 தியேட்டர்களில் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படம் பார்த்த பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு படம் குறித்து தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
செய்யாறு பாலு தனது விமர்சனத்தில், “ புஷ்பா 1, ஆந்திராவைக் கடந்து தமிழ்நாட்டிலும் பெருமளவு கொண்டாடப்பட்டது. காரணம் படத்தின் கதைதான். புஷ்பா 2 படத்தினை கடந்த 3 ஆண்டுகளாக எடுத்துக் கொண்டு இருந்தார்கள். படத்திற்கு நல்ல ப்ரோமோசன் செய்தார்கள். புஷ்பா 1இல் சாதாரண மரம் வெட்டியாக இருந்த புஷ்ப ராஜ், புஷ்பா 2வில் சிண்டிகேட் தலைவராகவும் டானாகவும் மாறுகின்றார். அவர் என்னமாதிரியான விஷயங்களைச் செய்கின்றார். சின்ன ஈகோ காரணத்தினால் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையே அவர் எப்படி மாற்றுகின்றார் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படம் மொத்தம் 3.20 மணிநேரம் எப்படி, தாக்குபிடிக்குமா என்ற சந்தேகத்துடன் சென்றேன். ஆனால் படத்தின் இயக்குநர் சுகுமாறன் ஓப்பனிங் சீனிலேயே பிடித்துவிட்டார். படத்தினை தோளிலும் தலையிலும் தாங்கி நிற்கும் ஒரே நபர் அல்லு அர்ஜுன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒரு சாதாரண கடத்தல்காரனாக இருந்த புஷ்பராஜ், சிண்டிகேட்டின் தலைவன் ஆன பின்னர் என்ன செய்கின்றான். குறிப்பாக தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை வைத்து என்ன செய்கின்றான் என்பதுதான் படத்தின் கதையாக உள்ளது.

திரைக்கதை: படம் தொடங்கி கொஞ்ச நேரத்தில் போலீஸ் ஸ்டேசன் ஒன்று காணாமல் போய்விடும். அந்தக் காட்சியை மிகவும் லாஜிக்காக செய்திருப்பார்கள். அதேபோல் மாலத்தீவில் ஒரு டீலிங் நடக்கும் அந்தக் காட்சியை மிகவும் அட்டகாசமான திரைக்கதையால் நகர்த்திருப்பார்கள். படம் முழுவதும் இதுபோல் பாராட்டத் தகுந்த காட்சிகள் இருக்கின்றது. அதேபோல், படம் முழுவதும் புஷ்பராஜ் ஆக வாழ்ந்துள்ள அல்லு அர்ஜுன் நடிப்பு பாராட்டப்படவேண்டியது. புஷ்பா ஏன் ஒரு பக்கம் சாய்ந்தவாறு நடக்கின்றார் எனக் கேட்கும்போது, அதற்கு கட்டை ஏத்தி ஏத்தி மார்க் இருக்கு பார் எனக் கூறும்போது தியேட்டரில் கைதட்டல்கள்.

உலக சினிமா ரசிகர்கள்: ராமேஸ்வரக் கடல் எல்லையைக் கடந்ததும், சர்வதேச கடல் எல்லை வந்துவிடும். அங்கு ஒரு காட்சி வைத்திருப்பார்கள். அதனைப் பார்க்கும்போது தெலுங்கு சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லாமல், உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களைக் கவரும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் படத்தில் உள்ள ராஷ்மிகா மந்தனா ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். கணவன் மனைவியாக இவர்களுக்குள் நடக்கும் ரொமான்ஸ், பெண் ரசிகர்களைக் கவர வைத்துள்ள சீன்கள் எல்லாம் மாஸ். இருவருக்கும் இடையில் ரொமான்ஸ் ஓவராகப் போனாலும் ரசிக்கின்றார்கள். அம்மன் வேடத்தில் அல்லு அர்ஜுன் நடனம் ஆடும் பாட்டில் கூட, புஷ்பராஜ் கதாபாத்திரத்தினை உள்வாங்கி நடனமாடியுள்ளார்.

பலம்: படத்தின் மற்றொரு பலம், ஃபகத் ஃபாசில், இவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அட்டகாசப்படுத்தியுள்ளார். ஒரு காட்சியில் கோபத்தோடு ஏமாற்றத்தை வெளிப்படுத்த வேண்டும். அந்தக் காட்சியில் எல்லாம் முகபாவணையிலேயே, அப்ளாஸ்களை அள்ளுகின்றார். அல்லு அர்ஜுனுக்கு இணையாக இறங்கி ஃபகத் ஃபாசில் சம்பவம் செய்கின்றார். தேவி ஸ்ரீபிரசாத் பாடல்கள், இசை சிறப்பாக உள்ளது. சாம். சி.எஸ் பின்னணி இசை நன்றாக உள்ளது.

மைனஸ்: படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் அட்டகாசம். தியேட்டரில் இருந்து ஒருவர் கூட வெளியேறவில்லை. அந்த அளவுக்கு அட்டகாசமான திரைக்கதை அமைத்துள்ளார். ஆடுகளம் நரேன் கொஞ்ச நேரம் வருகின்றார். அந்தக் கொஞ்ச நேரத்தில் படத்தில் பிரமாதப்படுத்திவிடுகின்றார். படம் பார்த்த ரசிகர்கள் படத்தை பாராட்டி வருகின்றனர். படத்தில் அங்கங்கு சில மைனஸ் உள்ளது. ஆனால், படமாகப் பார்க்கும்போது படம் பிரமாதமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











