தனது பெயரைச் சொல்லி நடிகைகளிடம் ஏமாற்றும் மோசடி கும்பல்.. பிரபல இயக்குனர் பரபரப்பு புகார்!
சென்னை: தனது பெயரைப் பயன்படுத்தி, நடிகைகளிடம் மோசடியில் ஈடுபடுவதாக, பிரபல இயக்குனர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நிவின் பாலி, நஸ்ரியா நடித்த, நேரம் என்ற படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன்.
இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகி, சிறப்பான வெற்றி பெற்றது.

அனைவரும் முன்னணி
அடுத்ததாக, பிரேமம் என்ற படத்தை மலையாளத்தில் இயக்கினார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதில் நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இதில் நடித்த அனைவரும் இப்போது முன்னணி நடிகையாக இருக்கின்றனர்.

படத்தின் பெயர் பாட்டு
இதையடுத்து அவர் அடுத்த படத்தை உடனடியாக ஆரம்பிக்கவில்லை. சுமார் 5 ஆண்டுகள் கழித்து தனது அடுத்த படத்தை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார், அல்போன்ஸ் புத்திரன். இதில் ஃபகத் பாசில் நாயகனாக நடிக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், 'எனது அடுத்தப் படத்தின் பெயர் 'பாட்டு'. யுஜிஎம் என்டர்டெய்ன்மென்ட்ஸ் தயாரிக்கிறது.

பெயரைச் சொல்லி
இந்த படம் மூலம் நான் இசை அமைப்பாளராக மாறி இருக்கிறேன். மற்ற விவரங்களை பிறகு தெரிவிக்கிறேன் ' என்று கூறியிருந்தார். இந்நிலையில் தனது பெயரைச் சொல்லி துணை நடிகைகளிடமும் பெண்களிடமும் மர்ம நபர்கள் பேசி வருவதாகக் கூறியுள்ளார்.

என்னிடமே புத்திரன்
அந்த போன் நம்பரையும் குறிப்பிட்டுள்ள அவர், இதுபற்றி பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: '9746066514', ‘9766876651 என்ற எண்களில் இருந்து என் பெயரை சொல்லி சிலர் பேசுகிறார்கள். நான் இந்த எண்களில் அழைத்தால், என்னிடமே அல்போன்ஸ் புத்திரன் பேசுகிறேன் என்று சொல்கிறார்கள்.

மோசடி வேலை
அதனால் இந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தால் யாரும் ஏமாந்து விடவேண்டாம். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வீடியோ, புகைப்படங்கள் எதையும் அனுப்ப வேண்டாம். இது ஒரு மோசடி வேலை என்பதை புரிந்துகொள்ளுங்கள். இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

நாட்களுக்கு முன்
இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே நடிகர் வினீத், சில நாட்களுக்கு முன் தனது பெயரை சொல்லி, சிலர் மோசடியில் ஈடுபடுவதாகக் கூறியிருந்தார். அது பற்றி போலீசில் புகார் செய்திருந்தார். இந்நிலையில், அல்போன்ஸ் புத்திரனும் கூறியிருப்பது கேரள சினிமாதுறையினரிடம் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











