அமரன் படத்துக்கு எதிராக கிளம்பிய சாதிய பிரச்சனை.. ஒரே போடாக போட்ட ராஜ்குமார் பெரியசாமி!
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே கன்டென்ட்டுடன் கலெக்ஷனையும் அள்ளும் படமாக அமரன் மாறியிருக்கிறது.
விஜய்யின் கோட் மற்றும் ரஜினிகாந்தின் வேட்டையன் படங்களை தொடர்ந்து அதிக வசூல் ஈட்டும் படமாக அமரன் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முதல் 200 கோடி படமாகவும் இந்த படம் அமையும் என்கின்றனர்.

முதல் 3 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலை அசால்ட்டாக அமரன் படம் கடந்த நிலையில், நேற்று வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் அமரன் படத்துக்கு எதிராக சாதிய ரீதியிலான பிரச்சனையையும் சிலர் சோஷியல் மீடியாவில் பயங்கரமாக கிளப்பி வந்த நிலையில், அதற்கு நேற்று நடைபெற்ற வெற்றி விழா நிகழ்ச்சியில் ராஜ்குமார் பெரியசாமி பதிலளித்துள்ளார்.
அமரன் வெற்றி விழா: சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான அயலான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. ஆனாலும், குழந்தைகளை அந்த படம் கவர்ந்தது. பல வருடங்கள் தாமதமாக வெளியான நிலையில், அந்த படம் ஹிட் அடிக்கவில்லை. தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திய நிலையில், முதல் 4 நாட்களிலேயே மிகப்பெரிய வசூல் வேட்டையை நிகழ்த்தியது. அதன் காரணமாக நேற்று வெற்றி விழாவும் நடைபெற்றது.

மேஜர் முகுந்தின் சாதியை மறைத்து விட்டனர்: இந்து ரெபேக்கா வர்கீஸ் கிறிஸ்துவர் என்பதை தெளிவாக காட்டிய இயக்குநர் மேஜர் முகுந்த் வரதராஜன் ஐயர் என்பதை காட்டுவதை மறைத்து விட்டார் என்கிற குற்றச்சாட்டுகளை சிலர் எழுப்பியது பெரும் பரபரப்பை கிளப்பியது. ஐயப்பன் கோயிலில் மேஜர் முகுந்த் வரதராஜனுக்காக ரெபேக்கா சாமி கும்பிடும் காட்சிகளையும் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெறும் காட்சிகளையும் இயக்குநர் படத்தில் வைத்திருந்தார். ஆனால், ஐயர் என்பதை சொல்லவில்லை என்று பிரச்சனைகள் வெடித்தன.
இயக்குநர் விளக்கம்: மேஜர் முகுந்த் வரதராஜன் ஒரு தமிழர் மற்றும் பெருமைமிகு இந்தியன் என்பதை மட்டுமே படத்தில் பதியவைத்தால் போதும் என முகுந்த் வரதராஜனின் அப்பா கேட்டுக் கொண்டார். அந்த காரணத்திற்காகவே அதை மட்டுமே மையப்படுத்தி படத்தை உருவாக்கினேன். மற்றபடி வேறு எந்த திட்டமும் இல்லை என்று ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் கொடுத்துள்ளார்.

150 கோடி வசூல்: சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ள அமரன் படத்தை பார்த்து விட்டு கண்களில் கண்ணீருடனே ரசிகர்கள் தியேட்டரை விட்டு வெளியே வருகின்றனர். பல இளைஞர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதுவரை 5 நாட்களில் அமரன் திரைப்படம் 140 முதல் 150 கோடி அளவுக்கு வசூல் செய்திருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அதிகாரப்பூர்வ வசூலை ராஜ்கமல் நிறுவனம் இன்னமும் வெளியிடவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படமும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்பது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











