சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் அம்பரீஷ்!
பெங்களூர்: சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து நலமுடன் பெங்களூர் திரும்பினார் நடிகர் அம்பரீஷ்.
பிரபல நடிகரும், கர்நாடக வீட்டுவசதித்துறை அமைச்சருமான நடிகர் அம்பரீஷுக்கு மூச்சுத் திணறல், சிறு நீரகப் பிரச்சினை ஏற்பட்டு, உடல்நிலை மோசமானது.
ஆரம்பத்தில் பெங்களூரில் சிகிச்சை பெற்ற, உற்ற நண்பர் நடிகர் ரஜினியின் ஆலோசனையின்பேரில் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சிங்கப்பூரில் 40 நாட்கள் சிகிச்சை முடிந்து அம்பரீஷ் மனைவி நடிகை சுமலதாவுடன் பெங்களூர் திரும்பினார்.
விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள், ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது வீட்டில் சில பெண்கள் ஆரத்தி எடுத்தனர். ரசிகர்கள் மத்தியில் அம்பரீஷ் பேசுகையில், "சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் நான் சில நாட்கள் சிகிச்சை பெற்றேன். எனது உடல்நலத்துக்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கு நன்றி.
அடுத்து நான் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன்," என்றார்.
அவர் மாண்டியா தொகுதியில் காங்கிரசுக்காக பிரசாரம் செய்வார் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











