Ameer: “கார்த்தி என்ன சிவாஜியா.. ஞானவேல்ராஜா வெறும் ஆபிஸ் பாய் தான்..” பருத்திவீரன் பிரபலம் விளாசல்
சென்னை: அமீரின் பருத்திவீரன் படத்தில் அசோஷியேட் டைரக்டராக வேலை பார்த்தவர் நடிகர் ராஜா. அவர் பருத்திவீரன் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
ஞானவேல்ராஜா வெறும் ஆபிஸ் பாய் தான்: மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். தொடர்ந்து ஜீவா ஹீரோவாக நடித்த ராம் படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டான நிலையில், மூன்றாவதாக பருத்திவீரனை இயக்கினார் அமீர். இதில் தான் சிவகுமாரின் மகனும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே கார்த்தியை தரமான ஒரு ஹீரோவாக உருவாக்கிக் காட்டினார் அமீர். பருத்திவீரன் வெளியான போது யாருமே எதிர்பாராத வகையில் அதிரிபுதிரியாக ஹிட்டானது. இதனால் கார்த்தியின் கேரியரும் ஜெட் வேகத்தில் உச்சம் தொட்டது. இந்நிலையில், பருத்திவீரன் படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆன பின்னரும் அமீர் - ஞானவேல்ராஜா இடையேயான பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் பருத்திவீரனை இயக்கிய அமீர், பின்னர் தயாரிப்பாளராகவும் மாறினார். அதாவது ஞானவேல் ராஜா சொன்னபடி பணம் தராததால் பருத்திவீரன் படத்தை அமீரே கடன் வாங்கி தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் சென்சார் சர்டிபிகேட்டிலும் அமீரின் பெயரே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமீரின் மெளனம் பேசியதே, பருத்திவீரன் படங்களில் உதவியாளராக பணியாற்றிய ராஜா தற்போது பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

சுப்ரமணியபுரம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் ராஜா. பருத்திவீரன் ஷூட்டிங்கில் அமீருடன் இறுதிவரை இருந்தவர்களில் இவரும் மிக முக்கியமானவர். இந்தப் படம் உருவானது குறித்து பேசியுள்ள ராஜா, அமீர் அண்ணன் இல்லையென்றால் பருத்திவீரன் உருவாகியிருக்காது. கார்த்தியும் இப்படியொரு ஹீரோவாக வந்திருக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
முக்கியமாக பருத்திவீரன் படத்திற்காக அமீர் இரண்டு லட்சம் அடிகளுக்கும் அதிகமான ஃபிலிம்களை பயன்படுத்தியதாகவும், இதனை வைத்து 4 படங்கள் எடுத்திருக்கலாம் எனவும் ஞானவேல்ராஜா தனது பேட்டியில் கூறியிருந்தார். அதேபோல், அமீர் தனது பணத்தில் தான் படம் இயக்கி பழகியதாகவும் பேசியிருந்தார். இதற்கெல்லாம் பதிலடி கொடுத்துள்ள ராஜா, கார்த்தி என்ன சிவாஜியா என கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்முறையாக நடிகராக அறிமுகமான கார்த்தியை தேர்ந்த நடிகனாக மாற்றியது அமீர் தான். அவர் அதிகமான டேக் வாங்கியதால் தான் அவ்வளவு ஃபிலிம் வீணாகிப் போனது. இதெல்லாம் ஞானவேல்ராஜாவுக்கு தெரியுமா, அவருக்கு எந்த லொக்கேஷனில் ஷூட்டிங் நடத்தினோம் என்றே தெரியாது. ஞானவேல்ராஜா ஆரம்பத்தில் ஒரு ஆபிஸ் பாய் மாதிரி தான் ஷூட்டிங் ஸ்பாட் வருவார்.
அவரெல்லாம் அமீர் அண்ணனை திருடன் என சொல்வதற்கு தகுதியே கிடையாது. அமீர் அண்ணனை ஞானவேல்ராஜா பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் ராஜா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











