Ameer: “சிவகுமார் அப்படி சொன்னதே கிடையாது... சூர்யா, கார்த்தி கால்ஷீட்டும் கொடுக்கல..” அமீர் ஓபன்
சென்னை: பருத்திவீரன் பட விவகாரத்தில் அமீர் - ஞானவேல் இடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் இந்த பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் பேசியதற்கு அமீர் பதிலடி கொடுத்துள்ளார்.

சிவகுமார் அப்படி சொன்னதே கிடையாது
பருத்திவீரன் பட விவகாரத்தில் அமீர் - ஞானவேல்ராஜா இருவருக்குமான மோதல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2007ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியான இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இயக்கியிருந்தார் அமீர்.
ஆனால், அதில் பட்ஜெட் அதிகமானதால் தயாரிப்புக்காக அமீர் செலவழித்த பணத்தை ஞானவேல் கொடுக்கவில்லை. அதேபோல் அமீரின் பெயரில் இருந்த பருத்திவீரன் படத்தின் வெளியீட்டு உரிமையை மிரட்டி எழுதி வாங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து அமீர் தொடர்ந்த வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், பருத்திவீரன் ரிலீஸின் போது தயாரிப்பாளர்கள் சங்க செயலாளராக இருந்தவர் சிவசக்தி பாண்டியன், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில், பருத்திவீரன் படம் ரிலீஸாகும் நேரத்தில் அமீர் - ஞானவேல் இடையே நடந்த மோதல்கள் குறித்தும், அதன் பின்னணி பற்றியும் விளக்கம் கொடுத்திருந்தார். மேலும், பருத்திவீரன் பட உரிமையை ஞானவேல்ராஜாவுக்கு அமீர் விட்டுக் கொடுத்தது குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.
அதற்காக பருத்திவீரன் படம் ரிலீஸானதும் சூர்யா, கார்த்தி இருவரும் அமீருக்கு கால்ஷீட் கொடுப்பார்கள் என சிவகுமார் சொன்னதாக தெரிவித்திருந்தார். அதேபோல் பருத்திவீரன் பட பட்ஜெட்டையும் 6 கோடி ரூபாய் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், சிவசக்தி பாண்டியன் பேட்டிக்கு பதிலடி கொடுத்து அமீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சூர்யா, கார்த்தி கால்ஷீட் குறித்தும் அமீர் விளக்கம் கொடுத்துள்ளார்.
"தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற "TEAMWORK PRODUCTION HOUSE" என்ற என்னுடைய நிறுவனத்தின் சார்பில் சென்சார் செய்யப்பட்ட "பருத்திவீரன்" திரைப்படத்தை இன்னொருவர் பெயருக்கு மாற்றிக் கொடுக்கக் கூடிய சூழ்நிலை தங்களுக்கு உருவானதா? அல்லது உருவாக்கப்பட்டதா.? என்பதை தாங்கள் அந்த நேர்காணலில் தெளிவாக விளக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.
மேலும், "பருத்திவீரன் திரைப்பட வெளியீட்டிற்குப் பிறகு திரு. சூர்யா அவர்களும், திரு. கார்த்தி அவர்களும் எனக்குத் தேதி தருவதாகச் சொன்னதாகவும், அதற்காக அவர்கள் என்னைப் பலமுறை தொடர்பு கொண்டதாகவும், அவர்களை வைத்துப் படம் தயாரித்து நான் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று திரு. சிவகுமார் அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவலை கூறியிருக்கிறீர்கள். "பருத்திவீரன்" திரைப்பட வெளியீட்டுக்குப் பின்பு, அப்படி எந்த நிகழ்வும் இன்று வரை நடைபெறவில்லை. யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவும் இல்லை, யாரும் என்னைச் சந்திக்கவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை."
அதேபோல், "நான் திரைத்துறைக்கு வந்த காலம் தொட்டே, பிரபல நடிகர்களைச் சந்தித்து, அவர்களிடம் தேதி வாங்கி, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு என்றைக்குமே ஏற்பட்டது இல்லை. இதை பல நேர்காணல்களில் நான் கூறியிருக்கிறேன் என்பதும் மறுக்க முடியாத உண்மை. மேலும், திரு.ஞானவேல்ராஜா அவர்களே பல நேர்காணல்களில் "பருத்திவீரன்" திரைப்படத்துக்கு 4 கோடியே 85 லட்ச ரூபாய் செலவிட்டதாக கூறியுள்ள போது, தாங்கள் 6 கோடி ரூபாய் செலவானதாக தவறான தகவலை அளித்துள்ளீர்கள்" என அமீர் பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











