Ameer: “பருத்திவீரன் சர்ச்சை... வெளிவந்தது முக்கியமான ஆதாரம்..” இப்ப ஞானவேல்ராஜா என்ன சொல்ல போறார்?
சென்னை: அமீர் இயக்கிய பருத்திவீரன் பட விவகாரம் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்தப் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இயக்கிய அமீர், பின்னர் அவரே சொந்தமாக தயாரித்துள்ளார்.
ஆனால், பருத்திவீரன் ஸ்டுடியோ க்ரீன் தயாரித்த படம் என கூறிய ஞானவேல்ராஜா, அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறினார்.
இந்நிலையில், தற்போது மிக முக்கியமான ஆதாரத்தை வலைப்பேச்சு பிஸ்மி தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

வெளியானது பருத்திவீரன் ஆதாரம்
அமீர் இயக்குநராக அறிமுகமான மெளனம் பேசியதே, சூர்யா கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஜீவா ஹீரோவாக நடித்த ராம் படத்தை இயக்கினார். மூன்றாவதாக அமீர் இயக்கிய பருத்திவீரன், இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. கார்த்தி ஹீரோவாக அறிமுகமான இந்தப் படம், அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது.
அதேநேரம் பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இந்தப் பட விவகாரத்தில் இயக்குநர் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் பருத்திவீரன் படத்தை தயாரிப்பதாக சொன்ன ஞானவேல்ராஜா, அமீருக்கு முழு பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாக அமீர் சமீபத்தில் கூறியிருந்தார். அப்போது ஞானவேல்ராஜா மீதும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். பருத்திவீரன் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே ஞானவேல்ராஜா பாதியில் விலகிவிட்டதாகவும், பின்னர் கடன் வாங்கி தான் இந்தப் படத்தை முடித்ததாகவும் அமீர் கூறியிருந்தார். ஆனால், கடைசியில் அவரிடம் பருத்திவீரன் பட உரிமையை ஞானவேல்ராஜா மிரட்டி வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்தச் சம்பவம் குறித்து சமீபத்தில் பேட்டிக் கொடுத்த ஞானவேல்ராஜா, அமீர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அமீர் ஒரு திருடன் என்றும், அவரால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை எனவும் கூறியிருந்தார். அதோடு பருத்திவீரன் படம் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகக் கூறியிருந்தார். தேவைப்பட்டால் அனைத்தையும் வெளியிடுவேன் எனவும் பேசியிருந்தார்.
அமீர் குறித்து ஞானவேல்ராஜா பேசியதற்கு அபராஜித் ஃபிலிம்ஸ் கணேஷ் ரகு, சமுத்திரகனி, கரு பழனியப்பன், பொன்வண்ணன், சினேகன், இயக்குநர் பாரதிராஜா, குட்டிச்சாக்கு, சேரன், நந்தா பெரியசாமி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் ஞானவேல்ராஜா. ஆனாலும், சசிகுமார், சமுத்திரகனி ஆகியோர் அமீருக்கு நியாயம் வேண்டும் என மீண்டும் குரல் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் பருத்திவீரன் படத்தின் தணிக்கை சான்றிதழை வலைப்பேச்சு பிஸ்மி வெளியிட்டுள்ளார். அதில், தயாரிப்பாளர் பெயரில் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் பெயர் இல்லை. அதற்குப் பதிலாக அமீரின் டீம்வொர்க் புரடக்ஷன் ஹவுஸ் பெயர் தான் உள்ளது. ஆனால், ஞானவேல்ராஜா பருத்திவீரன் படத்தை அவர் தான் தயாரித்ததாக கூறியிருந்தார். இதனையடுத்து இப்போது நெட்டிசன்கள் ஞானவேல்ராஜாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











