Ameer: சூர்யா, கார்த்தியை மிஞ்சிய அமீர்.. மிக்ஜாம் நிவாரண நிதி.. அள்ளிக் கொடுத்த ரியல் பருத்திவீரன்
சென்னை: கடந்த ஓரிரு மாதங்களாக அமீரின் பருத்திவீரன் பட சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், சூர்யா, கார்த்தியை மிஞ்சும் அளவிற்கு மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை அள்ளிக் கொடுத்துள்ளார் இயக்குநர் அமீர்.
மிக்ஜாம் நிவாரண நிதி வழங்கிய அமீர்
மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். சூர்யா, த்ரிஷா, நந்தா, லைலா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து ஜீவா நடித்த ராம் படத்தை இயக்கி தயாரித்தார் அமீர். இந்தப் படத்துக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், மூன்றாவதாக அமீர் இயக்கிய பருத்திவீரன் தமிழ் சினிமாவில் தரமான சம்பவமாக அமைந்தது.

கார்த்தி ஹீரோவாக அறிமுகமான இந்தப் படம், அவருக்கு சிறப்பான ஓபனிங் கொடுத்ததுடன் அவரது கேரியரையும் உச்சத்துக்கு கொண்டு சென்றது. அமீர், கார்த்தி, ப்ரியாமணி, யுவன் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் பருத்திவீரன் மிகப் பெரிய அடையாளமாக அமைந்தது. அதேநேரம் இந்தப் படத்தை தயாரித்தது தொடர்பாக அமீர் - ஞானவேல்ராஜா இடையே மோதல் வெடித்தது.
இதில், ஒருகட்டத்தில் அமீரிடம் இருந்து பருத்திவீரன் படத்தை மிரட்டி எழுதி வாங்கினாராம் ஞானவேல்ராஜா. இந்த சம்பவத்தின் பின்னணிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக சமீபத்தில் வெளியாகின. இதனால் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பாரா இல்லையா என்பது வரை விவாதம் சென்றது. ஏனெனில் வாடிவாசல் படத்தில் அமீர் கண்டிப்பாக நடிப்பார் என வெற்றிமாறன் கூறியிருந்தார். ஆனால், பருத்திவீரன் சர்ச்சையில் சூர்யா, கார்த்தி இருவருமே இதுவரை வாய் திறக்கவில்லை.
அமீர் தற்போது மாயவலை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்த அமீர், மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கியுள்ளார். அதாவது சென்னை மழை வெள்ள நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார் அமீர். இதனை டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது முதலமைச்சர் அலுவலகம்.
அதில், "திரைப்பட இயக்குநரும் நடிகருமான திரு. அமீர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்" என குறிப்பிட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் ஸ்டாலினிடம் அமீர் காசோலை வழங்கிய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
முன்னதாக சூர்யா, கார்த்தி இருவரும் இணைந்து 10 லட்சம் ரூபாய் நிதி கொடுத்திருந்தனர். இதனை குறிப்பிட்டு ரசிகர்கள் அவர்களை ட்ரோல் செய்து வருகின்றனர். பருத்திவீரன் படத்தால் உங்களிடம் ஏமாந்துபோன அமீர், தனி ஆளாக பத்து லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் கோடிகளில் சம்பளம் வாங்கும் சூர்யா, கார்த்தி அமீரிடமும் நியாயமாக நடந்துகொள்ளவில்லை, நிவாரண நிதியும் அதிகமாக கொடுக்கவில்லை என சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











