Ameer: "திருடன் நீதிமன்றம் செல்ல மாட்டான்..” ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவுக்கு அமீர் கேள்வி
சென்னை: பருத்தி வீரன் பட விவகாரத்தில் இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையே மோதல் வெடித்துள்ளது.
16 ஆண்டுகளுக்குப் பின்னர் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த பிரச்சினை, கோலிவுட்டையே பரபரப்பாக்கியுள்ளது.

இந்நிலையில், பருத்தி வீரன் படத்தின் தயாரிப்பு செலவில் அமீர் பொய்யான கணக்கு கொடுத்ததாக ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமீர், திருடன் நீதிமன்றம் செல்ல மாட்டான் என ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
திருடன் நீதிமன்றம் செல்ல மாட்டான்
இயக்குநர் பாலாவிடம் உதவியாளராக இருந்தவர் அமீர். பாலாவின் சேது, நந்தா படங்களில் அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை பார்த்த அமீர், மெளனம் பேசியதே படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சூர்யா ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் தான் த்ரிஷாவும் நாயகியாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. மெளனம் பேசியதே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், சூர்யா - அமீர் இடையே மோதல் வெடித்தது.
அதன்பின்னர் சூர்யாவின் தம்பி கார்த்தியை பருத்தி வீரன் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் அமீர். 2007ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. சூர்யாவின் உறவினரான ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரித்திருந்தார். பருத்தி வீரன் ரிலீஸாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அமீர் - ஞானவேல் ராஜா இடையே தற்போது மோதல் வெடித்துள்ளது.
பருத்தி வீரன் படத்தால் தனக்கு 2 கோடிக்கும் மேல் கடன் எனவும், இதற்கு ஞானவேல் ராஜா தான் காரணம் என்றும் அமீர் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளதாக அமீர் கூறியிருந்தார். ஆனாலும் தனக்கு நீதி கிடைக்கவில்லை என அமீர் தெரிவித்திருந்தது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அமீரின் குற்றச்சாட்டுகளுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்கம் கொடுத்திருந்தார்.
அதில், அமீர் தான் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், பருத்தி வீரன் படத்தால் அதிகம் சம்பாதித்தது அவர் தான் எனவும் பிளேட்டையே திருப்பிப் போட்டார். தன்னிடம் வாங்கிய கடனை அமீரால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இயக்கிக் கொடுத்தார். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் 2.75 கோடி பட்ஜெட்டில் முடிப்பதாக சொல்லிவிட்டு, இரண்டு ஆண்டுகளில் 4 கோடி வரை அமீர் செலவு செய்தார்.
அதுமட்டும் இல்லாமல் பன்றிகளை நடிக்க வைத்ததில் கூட பொய்யான கணக்கு எழுதி தன்னை ஏமாற்றிவிட்டார் என ஞானவேல் ராஜா கூறியிருந்தார். ஒருகட்டத்தில் அமீரை திருடன் என விமர்சித்திருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இதற்கு பதிலடி கொடுத்த அமீர், "நன்றி மறந்து நீ என் முதுகில் குத்தினாலும் மீண்டும் மீண்டும் உன் எதிரே திமிரோடு தான் நிற்பேன். உன்னைப் போல் நடிகர்களின் பின்னால் ஒளிய மாட்டேன்" எனக் கூறியிருந்தார்.
அதேபோல், தன்னை திருடன் என சொன்னதற்கும் அமீர் பதிலடி கொடுத்துள்ளார். "திருடன் நீதிமன்றம் செல்ல மாட்டான்; பாதிக்கப்பட்டவன் தான் நீதிமன்றம் செல்வான். தயாரிப்பாளர் சங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ஞானவேல் ராஜா நிறைவேற்றவில்லை" என விமர்சித்துள்ளார். இதனால், அமீர் - ஞானவேல் ராஜா பிரச்சினை நாளுக்கு நாள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











